குஜராத்தில் ஆட்சிக்கு வந்தால் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
இந்தாண்டு இறுதியில் குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தில்லியை தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்தை கைப்பற்றிய ஆம் ஆத்மி, தற்போது குஜராத்தில் கவனம் செலுத்தி வருகின்றது.
இந்நிலையில், ஆமதாபாத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கேஜரிவால் பேசியதாவது:
“தில்லி சிறிய மாநிலம் என்பதால் இலவச மின்சாரம் வழங்கியதாக பாஜக - காங்கிரஸ் கூறினார்கள். தற்போது பஞ்சாப் மாநிலத்தை கடவுள் கொடுத்துள்ளார். அந்த மாநிலத்திலும் மின்சாரம் இலவசமாக்கப்பட்டுள்ளது.
நான் படித்துள்ளேன். எனது பட்டமும் நேர்மையானது. அனைத்து கணக்கீடுகளையும் செய்த பிறகுதான் நான் பேசுவேன்.
குஜராத்தில் இரவு நேரத்தில் விவசாயிகளுக்கு மின்சாரம் வழங்கப்படுகிறது. அதற்கு மாதந்தோறும் விவசாயிகள் ரூ. 5 ஆயிரம் கட்டணம் கட்டுகிறார்கள். குஜராத் தலைமைச் செயலகத்திலும் இரவில் தான் மின்சாரம் வரவேண்டும். அமைச்சர்களும் இரவில் பணிபுரிய வேண்டும்.
ஆயிரக்கணக்கான யூனிட்டுகளை உபயோகிக்கும் அமைச்சர்களின் கட்டணம் ஜீரோவாக வருகிறது. ஆனால், ஒரு விளக்கு, ஒரு மின்விசிறி உபயோகிக்கும் மக்களுக்கு ஆயிரக்கணக்கில் கட்டணம் வருகிறது. இப்படி இருந்தால், ஏழைகளால் தங்கள் குழந்தைகளை எப்படி படிக்க வைக்கமுடியும்.
தில்லி மற்றும் பஞ்சாபில் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. இது குஜராத்திலும் நடைமுறைப்படுத்தப்படும். இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் அடுத்த சந்திப்பின்போது விரிவாக கூறுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.