தான் திரும்பி வருவேன் என்று கூறியபோது கேலி செய்தவர்களை மன்னித்துவிடுகிறேன் என மகாராஷ்டிர பேரவையில் துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் பேசியுள்ளார்.
மகாராஷ்டிர சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு வெற்றி பெற்றது.
மகாராஷ்டிர சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க, 145 வாக்குகள் தேவைப்படும் நிலையில், 164 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளது.
இதையடுத்து சட்டப்பேரவையில் பேசிய துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ், 'நான் திரும்பி வருவேன் என்று கூறியிருந்தேன். ஆனால், நான் அப்படிச் சொன்னதும் பலர் என்னைக் கேலி செய்தார்கள். நான் கூறியதுபோல இன்று திரும்பி வந்ததுடன் என்னுடன் ஏக்நாத் ஷிண்டேவையும் அழைத்து வந்துள்ளேன். என்னை கேலி செய்தவர்களை நான் பழிவாங்கமாட்டேன். நான் அவர்களை மன்னித்துவிடுகிறேன். ஏனெனில், அரசியலுக்கு இது சரிவராது.
அரசியலில் எதிரிகளின் குரலுக்கு செவிசாய்க்க அனைவரும் தயாராக வேண்டும். அறிக்கைகள், சமூக ஊடகங்களில் கருத்துகளை பதிவிட்டதற்காக மக்களை சிறையில் அடைக்கிறார்கள். நமக்கு எதிராக பேசுபவர்களுக்கு பதில் அளிக்க நாம் தயாராக இருக்க வேண்டும். விமர்சனங்களுக்கு நாம் சரியான முறையில் பதிலளிக்க வேண்டும் என்று பேசியுள்ளார்.
மேலும், 'கடந்த தேர்தலில் எங்களிடம் முதலில் பெரும்பான்மை இருந்தது. ஆனால், அது எங்களிடம் இருந்து பறிக்கப்பட்டுவிட்டது. இப்போது ஏக்நாத் ஷிண்டேவுடன் இணைந்து மீண்டும் சிவசேனை கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளோம். உண்மையான சிவசேனை விசுவாசி இன்று முதல்வராக ஆக்கப்பட்டுள்ளார். எனது கட்சியின் கட்டளைப்படியே நான் துணை முதல்வர் ஆனேன்.
ஏனெனில், என்னை முதல்வர் ஆக்கியதே கட்சிதான். கட்சி சொன்னால் வீட்டில்கூட உட்கார்ந்திருப்பேன். இன்று நான் உங்களுக்குச் சொல்கிறேன், இந்த அரசில் அதிகாரத்திற்கான சண்டை ஒருபோதும் இருக்காது, நாங்கள் தொடர்ந்து ஒத்துழைப்போம். இது ED அரசாங்கம் என்று மக்கள் கிண்டல் செய்கிறார்கள். ஆம், இது ஏக்நாத் -தேவேந்திர(ED) அராசாங்கம்தான்' என்று பேசினார்.
இதையும் படிக்க | நம்பிக்கை வாக்கெடுப்பில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு வெற்றி