புது தில்லி: மகாராஷ்டிர மாநிலம் அமராவதியில் நூபுர் சர்மாவுக்கு ஆதரவு தெரிவித்து முகநூலில் கருத்து பதிவிட்டிருந்த கடை உரிமையாளர் உமேஷ் கோல்ஹே, ஜூன் 21ஆம் தேதி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணைக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டுள்ளார்.
உதய்பூரில் நடந்த தையல்காரர் படுகொலைச் சம்பவம் போன்றே, அமராவதி படுகொலையும் இருப்பதால், தேசிய புலனாய்வு அமைப்பின் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாக, மத்திய உள்துறை அமைச்சகத்தின் சுட்டுரைப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த சுட்டுரைப் பதிவில், மத்திய உள்துறை அமைச்சகம், மகாராஷ்டிர மாநிலம் அமராவதியில் ஜூன் 21ஆம் தேதி, உமேஷ் கோல்ஹே படுகொலைச் சம்பவம் குறித்த விசாரணையை தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைத்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
இந்த படுகொலைச் சம்பவத்தின் பின்னணியில் இருக்கும் மர்மம், எந்த அமைப்புக்கு தொடர்பு, சர்வதேச அமைப்புகளின் பின்னணி ஏதேனும் இருக்கிறதா என்பது குறித்தும் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
உதய்பூரில் தையல்காரர் கன்னையா லால் கொலை செய்யப்படுவதற்கு சரியாக ஒரு வாரத்துக்கு முன்பு, 54 வயது உமேஷ் பிரஹலத்ராவ் கோல்ஹே என்ற மருந்தாளுநர், மகாராஷ்டிர மாநிலம் அமராவதியில் ஜூன் 21ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார்.
முதற்கட்ட விசாரணையில், நூபுர் சர்மாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலான பதிவுகளை உமேஷ் தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளார். அதன்பிறகே இந்த படுகொலை நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து என்ஐஏ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.