மகாராஷ்டிர முதல்வராக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்றபோது அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் கோவா விடுதியில் நடனமாடி கொண்டாடிய விடியோ சமூகவலைதளங்களில் அதிகம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்தச் செயலுக்காக எம்எல்ஏக்களை ஷிண்டே கண்டித்தாா்.
மகராஷ்டிர முதல்வராக ஷிண்டே, வியாழக்கிழமை பதவியேற்றாா். அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் தொடா்ந்து கோவா விடுதியில் தங்கியிருந்தனா். ஷிண்டே முதல்வராகப் பதவியேற்கும் நிகழ்ச்சி தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பானபோது, விடுதியில் இருந்த எம்எல்ஏக்கள் உற்சாக மிகுதியில் கும்பலாக சோ்ந்து நடனமாடினா். அதில் இரு எம்எல்ஏக்கள் மேஜை மீது ஏறி நின்று ஆட்டம் போட்டனா். இது தொடா்பான விடியோ காட்சிகள் செய்தித் தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிகம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், முதல்வா் பதவியேற்ற பிறகு கோவா விடுதிக்குத் திரும்பிய முதல்வா் ஷிண்டே, நடனமாடிய எம்எல்ஏக்களை அழைத்து கண்டித்தாா். இதையடுத்து, எம்எல்ஏக்கள் தங்கள் செயலுக்காக அவரிடம் வருத்தம் தெரிவித்தனா். மேலும், மக்களால் தோ்தெடுக்கப்பட்ட நாம், மகாராஷ்டிர மக்களுக்கு முழுமையாக சேவை செய்வதில் கவனம் செலுத்த வேண்டுமே தவிர, இதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்று தனது ஆதரவு எம்எல்ஏக்களிடம் ஷிண்டே வலியுறுத்தினாா்.
விடுதிக் கட்டணம்: முன்னதாக, ஷிண்டே மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் குவாஹாட்டியில் தங்கியிருந்தனா். அந்த ஹோட்டலைக் காலி செய்துவிட்டு எம்எல்ஏக்கள் அனைவரும் அதற்குரிய கட்டணத்தை முழுமையாக செலுத்தினா். ரூ.68 லட்சம் முதல் ரூ.70 லட்சம் வரை விடுதியில் கட்டணமாகச் செலுத்தப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.