பாஜக செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஹைதராபாத் வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக போராட்டக்காரர்கள் மேற்கொண்டுள்ள பிரசாரம் கவனம் ஈர்த்துள்ளது.
தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் 2 நாள் நடைபெறும் பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தை பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா சனிக்கிழமை தொடங்கி வைத்தார். தேசிய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக பாஜக தலைவர்கள் ஹைதராபாத்தில் முகாமிட்டுள்ளனர்.
இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை மாலை ஹைதராபாத் வருகிறார். ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் தேசிய செயற்குழுவில் மோடி உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டக்காரர்கள் பிரபலமான மணி ஹைஸ்ட் இணையத் தொடரில் வரும் கதாபாத்திரங்களின் உடை அணிந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளது பிரபலமடைந்துள்ளது. ஹைதராபாத்தில் எழுப்பப்பட்டுள்ள பேனர்களில் மணி ஹைஸ்ட் கதாபாத்திரங்கள் அடங்கிய படங்களுடன் “மிஸ்டர் மோடி, நாங்கள் வங்கியை மட்டும்தான் கொள்ளையடித்தோம். நீங்கள் நாட்டையே கொள்ளையடிக்கிறீர்கள்” எனப் பொறிக்கப்பட்ட வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
இதையும் படிக்க | இணையதள செய்தியாளா் முகமது சுபைருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்
இந்தப் படம் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் மணிஹைஸ்ட் உடையணிந்து பொதுத்துறை நிறுவனங்கள் முன்பாக மோடிக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை பிடித்தபடி போராட்டக்காரர்கள் நிற்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
மணி ஹைஸ்ட் தொடரானது வங்கியை கொள்ளையடிக்கும் கதையை பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இணையைத் தொடராகும். பெரும் பணக்காரர்களுக்காக அரசு மக்களின் பணத்தை அபகரிப்பதற்கு எதிர்ப்பு அமைக்கப்பட்ட இந்த இணையத் தொடரின் கதாபாத்திரங்கள் உலகப் புகழ்பெற்றவை. உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அரசுக்கு எதிரான போராட்டங்களில் இடம்பெற்ற மணி ஹைஸ்ட் கதாபாத்திரம் தற்போது இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை.