குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு ஆதரவு அளிப்பதாக சிரோமணி அகாலி தளம் அறிவித்துள்ளது.
பாஜக கூட்டணியில் இருந்து விலகிய சிரோமணி அகாலி தளம் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பழங்குடியின இனத்தைச் சேர்ந்த திரௌபதி முர்முவுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளது.
இது குறித்துப் பேசிய அகாலி தளத்தின் தலைவர் சுக்பீர் பதால் கூறியதாவது: “ வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது, சீக்கியர்களை சிறையில் அடைத்தது போன்ற விஷயங்களில் பாஜகவுடன் கருத்து வேறுபாடுகள் இருக்கின்ற போதிலும் அவர்கள் நிறுத்தியுள்ள குடியரசுத் தலைவர் வேட்பாளரை நாங்கள் ஆதரிப்பதாக முடிவு செய்துள்ளோம். காங்கிரஸ் நிறுத்தும் வேட்பாளரை சிரோமணி அகாலி தளம் ஒரு போதும் ஆதரிக்காது. சீக்கியர்களுக்கு காங்கிரஸ் துரோகம் செய்துவிட்டது. பொற்கோயில் தாக்குதல் மற்றும் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் கொலை போன்றவற்றால் காங்கிரஸூக்கு ஒரு போதும் ஆதரவு கிடையாது. அகாலி தளம் விளிம்புநிலை மக்களின் நலனுக்கு ஆதரவு அளிக்கும். பாஜவுடன் எத்தனை கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் சமூகத்தில் பின் தங்கிய ஒரு பழங்குடியினப் பெண்ணை அவர்கள் தங்களது குடியரசுத் தலைவர் வேட்பாளரக அறிவித்துள்ளார்கள். அந்த வேட்பாளருக்கு எங்களது ஆதரவு உண்டு.” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தொலைபேசியின் மூலம் என்னைத் தொடர்பு கொண்டு குடியரசுத் தலைவர் வேட்பாளருக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொண்டார். அதேபோல, குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள திரௌபதி முர்முவும் என்னைத் தொடர்பு கொண்டு ஆதரவு கோரினார். திரௌபதி முர்மு கேட்டுக் கொண்டதன் காரணமாக அவருக்கு ஆதரவு அளித்து அவரை நாட்டின் முதல் பழங்குடியினத்தைச் சேர்ந்த குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்க உள்ளோம் என்றார்.
திரௌபதி முர்மு ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் ஆவார். ஒடிசாவைச் சேர்ந்தவர். அவர் இந்தத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டால் நாட்டிலேயே முதன் முறையாக பழங்குடியினப் பெண்மணி ஒருவர் நாட்டின் மிக உயர்ந்த பதவிக்கு வரும் சாதனை நிகழும்.