கடந்த ஆண்டு காங்கிரஸில் இருந்து வெளியேறிய பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங், பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
89 வயதான அமரீந்தர் சிங் தற்போது அறுவை சிகிச்சைக்காக லண்டன் சென்றுள்ளார். அவர் அடுத்த வாரம் லண்டனிலிருந்து திரும்ப உள்ளார். லண்டனிலிருந்து திரும்பியவுடன் தனது பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சியினை பாஜகவுடன் அவர் இணைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அறுவை சிகிச்சைக்குப் பின் பிரதமர் நரேந்திர மோடி, அமரீந்தர் சிங்கிடம் பேசியதாக கூறப்படுகிறது. 50 ஆண்டுகளாக காங்கிரஸில் இருந்து வந்த அமரீந்தர் சிங் கடந்த ஆண்டு காங்கிரஸில் இருந்து வெளியேறினார்.
இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் ஒன்றையும் அவர் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: “ கட்சித் தலைமையால் நான் மூன்று முறை அவமானப்படுத்தப் பட்டேன் இனியும் இதனை பொறுக்க முடியாது. எனக்குள் இன்னும் அரசியல் உள்ளது என்பதை மறந்துவிட வேண்டாம்” எனக் கூறியிருந்தார்.
காங்கிரஸில் இருந்து விலகியவுடன் அவர் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், அதனை அவர் மறுத்துவிட்டார். அவர் புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்தார். பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். பாட்டியாலா தொகுதியிலிருந்து போட்டியிட்ட அவர் தோல்வியைத் தழுவினார்.
தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் தலைவர்கள் பலரும் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவி இணைந்து வருகின்றனர். இருப்பினும், அமரீந்தர் சிங்கின் மனைவி பிரினீத் கவுர் காங்கிரஸில் தொடர்ந்து இருந்து வருகிறார். அவர் காங்கிரஸ் சார்பில் பாட்டியாலா தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.