மூக்கு வழியே செலுத்தப்படும் தடுப்பு மருந்தின் மூன்றாம் கட்ட மருத்துவ சோதனைகளை நடத்த இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. இந்தியா முழுவதும் மொத்தம் 9 இடங்களில் இந்த சோதனை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊசி உள்ளிட்டவை இல்லாமல் நேரடியாக மூக்கு வழியாக செலுத்தப்படுவதன் காரணமாக குறைந்த காலத்தில் அதிக நபர்களுக்கு பூஸ்டர் தடுப்பு மருந்து செலுத்த முடியும் என பாரத் பயோடெக் கூறியுள்ளது.
கரோனா வைரஸ் நமது உடலில் மூக்கு வழியாகவே பரவுகிறது. எனவே, மூக்கு வழியே செலுத்தப்படும் இந்த தடுப்பு மருந்து இதை தடுப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த தடுப்பு மருந்தை செலுத்துவதற்கு தனியாகப் பயிற்சி பெற்ற சுகாதாரப் பணியாளர்கள் யாரும் தேவையில்லை என்றும் மிக எளிதாகச் செலுத்தி கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | டெல்டா கரோனாவை தடுத்து நிறுத்தும் ஒமைக்ரான்: ஆய்வில் புதிய தகவல்
இதன் மூன்றாம் கட்ட சோதனைகளை மேற்கொள்ளக் கடந்த மாதம் பாரத்பயோடெக் அனுமதி கேட்டிருந்தது.
முன்னதாக, கோவாக்ஸின் மற்றும் கோவிஷீல்ட் தடுப்பூசிகளை நேரடியாகச் சந்தையில் விற்க மத்திய அரசு ஒப்புதல் அளித்திருந்தது. இருப்பினும், கோவாக்ஸின் மற்றும் கோவிஷீல்ட் தடுப்பூசி எப்போது நேரடியாகச் சந்தையில் கிடைக்கும் என்பது குறித்த தகவல்களை மத்திய அரசு இதுவரை அறிவிக்கவில்லை.