உத்தரப் பிரதேச தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிரமான பரப்புரையில் ஈடுபட்டுவருகின்றன. இந்நிலையில், மேற்கு உத்தரப் பிரதேசத்தை குறிவைத்து பாஜக இன்று பரப்புரையை மேற்கொண்டுள்ளது. 100க்கும் மேற்பட்ட தொகுதிகளை கொண்டுள்ள மேற்கு உத்தரப் பிரதேசத்தில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.
இதனிடையே, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் இன்று பரப்புரையில் ஈடுபட்டுவருகின்றனர்.
நீக்கப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் ஒரு வருடத்திற்கு மேலாக போராடிய நிலையில், இந்த பகுதியில் பாஜக கடும் அதிருப்தியை சம்பாதித்துள்ளது. கடந்த 2017 தேர்தலில், மேற்கு உத்தரப் பிரதேசத்தில் 76 சதவிகித இடங்களை பாஜகவே கைப்பற்றியிருந்தது
ஆனால், இந்த இம்முறை போட்டி எளிதாக இருக்காது என அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர். மேற்கு உத்தரப் பிரதேசத்தின் பெரும்பாலான பகுதியில் ஜாட் சமூகத்தினரே கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர். முன்னாள் பிரதமர் சரண் சிங்கின் பேரனான ஜெயந்த் செளத்ரியின் ராஷ்ட்ரிய லோக் தள கட்சி, ஜாட் சமூக மக்களிடையே நல்ல செல்வாக்கை பெற்றுள்ளது. இந்த தேர்தலில், இக்கட்சி அகிலேஷின் சமாஜ்வாதியுடன் கைகோர்த்துள்ளது.
தில்லியில் ஜாட் சமூக தலைவர்களுடான சந்திப்பின்போது, ஜெயந்த் செளத்ரி தவறான கூட்டணியை தேர்ந்தெடுத்திருக்கிறார் என அமித் ஷா விமர்சித்திருந்ததாக பிடிஐ செய்தி வெளியிட்டிருந்தது.
இதற்கு மத்தியில், பிருந்தாவனத்தில் உள்ள பாங்கே பிஹாரி கோயிலில் அமித் ஷா, இன்று வழிபாடு மேற்கொள்ளவுள்ளார். அயோத்தியா, வாரணாசிக்கு பிறகு இந்துத்தவாவின் சின்னமாக மதுராவை முன்னெடுக்க இந்த பயணம் மேற்கொள்ளப்படுகிறது எனக் அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.
இதையும் படிக்க | தமிழ்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காத ரிசர்வ் வங்கி அலுவலர்கள்: காவல்துறையில் புகார்
கிருஷ்ணர் கோயில் மீட்டெடுக்கப்படும் என முதல்வர் யோகியும் துணை முதல்வர் கேசவ் பிரசாத் வெளரியாவும் சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தனர்.
கடந்த டிசம்பர் 29ஆம் தேதி, மதுராவில் நடைபெற்ற கூட்டத்தில், "அயோத்தி, காசிக்கு (வாரணாசி) பிறகு, பிருந்தாவனம், மதுரா மட்டும் விட்டுவைக்கப்படுமா?" என பேசியிருந்தார். இதுகுறித்து மெளரியா, "அயோத்தி, காசியில் உள்ள பெரிய கோயில்களின் கட்டுமான பணிகள் நடைபெற்றுவருகிறது. அடுத்தது மதுராதானே?" என பதிவிட்டிருந்தார்.