ஒடிசாவின், நாயகர் மாவட்டத்தில் நடத்தப்பட்ட சோதனையில் 3.100 கிலோவுக்கும் அதிகமான பிரவுன் சுகர், ரூ.65 லட்சத்துக்கும் அதிகமான பணம் மற்றும் 3 துப்பாக்கிகளை ஒடிசா காவல்துறையினர் கைப்பற்றி ஒருவரை கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து குற்றப்பிரிவு கூடுதல் இயக்குநர் ஜெனரல் சஞ்சீப் பாண்டா கூறுகையில்,
ஒடிசா காவல்துறையின் சிறப்பு அதிரடிப் படை குழுவினர் நேற்றிரவு நாயகர் மாவட்டத்தின், சிந்துரா அருகே சோதனை நடத்தினர். அப்போது 3 கிலோ 100 கிராம் பிரவுன் சுகர், ரூ.65.32 லட்சம் பணம் மற்றும் மூன்று 7எம்.எம் கைத்துப்பாக்கிகளைப் பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும், இந்த சோதனையின் போது தோட்டாக்கள், பணம் எண்ணும் இயந்திரம், மொபைல் போன்கள் மற்றும் ஒரு டேப்லெட் செட் ஆகியவற்றையும் கைப்பற்றியதாக அவர் கூறினார்.
குற்றம் சாட்டப்பட்டவர் குர்தா மாவட்டத்தின் ராஜா பஜாரைச் சேர்ந்த கே.விக்கி ராவ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் இரண்டு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர், அவர்களைப் பிடிக்க காவல்துறையினர் தீவிர வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பாக, காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.