தலைநகர் தில்லியில் கரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் கட்டுப்பாடுகள் விரைவில் தளர்த்தப்படும் என்று முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
குடியரசு தினத்தையொட்டி, தில்லியில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் அரவிந்த் கேஜரிவால், ' தில்லியில் தற்போது கரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இதனால் வணிகர்கள் சங்கத்திலிருந்து பெற்ற கோரிக்கைகளின் அடிப்படையில், வார இறுதி ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை தளர்த்த ஆளுநருக்கு முன்மொழிவு அனுப்பப்பட்டது.
ஆனால், அவர் அதில் சில பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டு வார இறுதி ஊரடங்கு தளர்வுக்கு அனுமதி மறுத்துவிட்டார். மக்களின் பாதுகாப்புக்காகவே இன்னும் தளர்வுகள் நீக்கப்படாமல் உள்ளன.
எனினும், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை அரசு விரும்பாததால், கரோனா கட்டுப்பாடுகள் விரைவில் தளர்த்தப்படும்' என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், 'தில்லி அரசின் ஒவ்வொரு அலுவலகத்திலும் அம்பேத்கர் மற்றும் பகத்சிங்கின் புகைப்படங்கள் இருக்கும் என இன்று அறிவிக்கிறேன். குடியரசு தின விழாவையொட்டி, முதல்வர் அல்லது அரசியல்வாதிகளின் புகைப்படங்களை அரசு அலுவலகங்களில் வைக்கமாட்டோம்' என்றும் கூறினார்.