இந்தியா

தேசிய பால புரஸ்கார் விருது பெற்றவர்களுடன் கலந்துரையாடிய மோடி

DIN


புது தில்லி: பிரதமரின் தேசிய பால புரஸ்கார் விருது பெற்றவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி மூலம் கலந்துரையாடினார். 

பிளாக்செயின் எனப்படும் இணைய வழி ஆவண பரிமாற்றத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 2021, 2022 ஆம் ஆண்டுகளின் விருதாளர்களுக்கு டிஜிட்டல் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விருதாளர்களுக்கு முதன்முறையாக சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியில் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, இணையமைச்சர் டாக்டர் முஞ்பரா மகேந்திரபாய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மத்தியப்பிரதேசத்தின் இந்தூரைச் சேர்ந்த சிறுவன் அவி சர்மாவுடன் கலந்துரையாடிய பிரதமர், ராமாயணத்தின் பல்வேறு அம்சங்களை சிறந்த முறையில் வெளிப்படுத்தியிருப்பதன் ரகசியம் பற்றி கேட்டார். முழு ஊரடங்கின்போது ராமாயணம் தொடரை ஒளிபரப்புவது என்ற முடிவால் தாம் ஊக்கம் பெற்றதாக அவி சர்மா கூறினார். அவரது படைப்பில் சில பாடல் வரிகளையும் பாடினார்.

கர்நாடகத்தைச் சேர்ந்த ரிமோனா எவடே பெரிராவுடன் உரையாடிய பிரதமர், இந்திய நடனத்தில் அவரது ஆர்வம் குறித்து விவாதித்தார். இந்த ஆர்வத்தைத் தொடரும்போது எதிர்கொண்ட பிரச்னைகள் பற்றியும் அவர் கேட்டறிந்தார். தமது மகளின் கனவுகள் நிறைவேற சொந்த நலன்களை மறந்த அவரது தாயாரை பிரதமர் பாராட்டியதோடு, ரிமோனாவின் சாதனைகள் அவரது வயதை விட மிகவும் பெரியவை என்றும் இந்த மகத்தான தேசத்தின் பலத்தை வெளிப்படுத்தும் ஒரு வழியாக இந்தக் கலை உள்ளது என்று தெரிவித்தார்.

பிகார் மாநிலத்தின் மேற்கு சம்ப்ரானைச் சேர்ந்த சிறுவன் திராஜ் குமாருடன் உரையாடிய பிரதமர், முதலைத் தாக்குதலிலிருந்து இளைய சகோதரரைக் காப்பாற்றிய சம்பவம் பற்றியும், இளைய சகோதரரைக் காப்பாற்றிய போதும் இப்போது புகழ் பெற்றுள்ள போதும் அவரது மனநிலை எப்படி இருக்கிறது என்பது பற்றியும் பிரதமர் கேட்டார். அந்த சிறுவனின் துணிச்சலையும், சமயோசித அறிவையும் பிரதமர் பாராட்டினார்.

ஒரு ராணுவ வீரராக நாட்டிற்கு சேவை செய்ய தாம் விரும்புவதாக பிரதமரிடம் திராஜ் கூறினார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், சுதந்திரத்தின் 75-வது ஆண்டுப் பெருவிழா கொண்டாடும் முக்கியமான தருணத்தில் இவர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது. கடந்த காலத்திலிருந்து வலிமையைப் பெற்று அமிர்த காலமான வரும் 25 ஆண்டுகளில் மகத்தான விளைவுகளை உருவாக்க அர்ப்பணிப்பதற்கான தருணம் இது என்று அவர் கூறினார். 

தேசிய பெண் குழந்தைகள் தினத்தன்று நாட்டின் மகள்களையும் அவர் பாராட்டினார். விடுதலைப் போராட்டத்தின் புகழ் மிக்க வரலாற்றையும் பீர்பால கனக்லதா பருவா, குதிராம் போஸ், ராணி கைடிநீலு ஆகியோரின் பங்களிப்பையும் பிரதமர் நினைவு கூர்ந்தார். “இளம் வயதிலேயே இந்த வீரர்கள் நாட்டின் சுதந்திரத்திற்கான இயக்கத்தில் ஈடுபட்டு அதற்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டார்கள்” என்று பிரதமர் குறிப்பிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கீர்த்தி சுரேஷுக்குத் திருமணம்?

அதிகரித்த சர்க்கரை அளவு: கேஜரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது!

உடல்கூறாய்வு அறிக்கை: 14 முறை குத்தப்பட்டு 58 வினாடிகளில் பலியான மாணவி நேஹா

தண்டனையை நிறுத்திவைக்கக் கோரிய ராஜேஷ் தாஸ் மனு தள்ளுபடி

திருமண மகிழ்ச்சியில் அபர்ணா தாஸ்!

SCROLL FOR NEXT