ஜல்னா/ ஒளரங்காபாத்: மகாராஷ்டிர மாநிலத்தில் நகர பஞ்சாயத்துகளுக்கு நடைபெற்ற தோ்தலில் பாஜக 384 இடங்களில் வெற்றி பெற்றது.
மகாராஷ்டிரத்தில் 106 நகர பஞ்சாயத்துகளில் உள்ள 1,802 இடங்களுக்கு தோ்தல் நடைபெற்றது. அதில் 97 நகர பஞ்சாயத்துகளுக்கான வாக்கு எண்ணிக்கை புதன்கிழமை நடைபெற்றது. மாவோயிஸ்ட் பாதிப்பு உள்ள 9 பஞ்சாயத்துகளில் வியாழக்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.
அறிவிக்கப்பட்ட முடிவுகளின்படி பாஜக 384 இடங்களில் வெற்றி பெற்றது. அடுத்தபடியாக தேசியவாத காங்கிரஸ் 344 இடங்களில் வென்றது.
தேசியவாத காங்கிரஸ் இடம்பெற்றுள்ள மகாராஷ்டிர விகாஸ் அகாடி கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் 316 இடங்களிலும், சிவசேனை 284 இடங்களிலும் வெற்றி பெற்றன.
மொத்தமாக தேசியவாத காங்கிரஸ் 25, பாஜக 24, காங்கிரஸ் 18, சிவசேனை 14 நகர பஞ்சாயத்துகளை கைப்பற்றியுள்ளன.