உத்தரப்பிரதேசத்தில் இன்று மூன்றாம் கட்ட தேர்தல் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், அடுத்த கட்ட தேர்தலுக்காக ஹர்டோயில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
அப்போது, சமாஜ்வாதி கட்சியை கடுமையாக விமரிசித்து பேசிய அவர், 2014 முதல் 2017 வரை, உத்தரப் பிரதேசத்திற்காக என்னை பணி செய்ய விடாமல் குடும்ப அரசியல் செய்பவர்கள் தடுத்தனர் எனக் குற்றம் சாட்டினார்.
இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "ஹர்டோய் மக்கள் இரண்டு முறை ஹோலியை கொண்டாட ஏற்பாடுகளை செய்துள்ளனர். மார்ச் 10 ஆம் தேதி பாஜகவின் மாபெரும் வெற்றியுடன் முதல் ஹோலி கொண்டாடப்படும். ஆனால், மார்ச் 10ஆம் தேதி ஹோலி கொண்டாட விரும்பினால், நீங்கள் வாக்குச் சாவடிகளில் ஏற்பாடு செய்ய வேண்டும்.
இன்றும் மூன்றாம் கட்டமாக எவ்வித வாக்கு சிதறலும் இன்றி தாமரை சின்னத்தில் வாக்களிக்கப்பட்டுவருகிறது. இதுவரை எங்களுக்கு கிடைத்துள்ள செய்திகள் மிகவும் உற்சாகமூட்டுவதாக உள்ளது. நாட்டின் ஏழை, விவசாயிகள் மற்றும் இளைஞர்களுக்காகத்தான் பாஜக அரசு உள்ளது.
நீங்கள் வாக்களித்த இரட்டை எஞ்சின் அரசு எந்த குடும்பத்திற்கும் சொந்தமானது அல்ல. எங்கள் அரசு ஏழைகள், விவசாயிகள் மற்றும் இளைஞர்களுக்கானது. 2014-2017 வரை, குடும்ப அரசியல் செய்பவர்கள் என்னை ஆதரிக்கவில்லை என்பது வருத்தமளிக்கிறது.
இதையும் படிக்க | பட்டியலினத்தைச் சேர்ந்தவர் குதிரையில் செல்லக் கூடாதா?: ஐபிஎஸ் மணமகனின் திருமண ஊர்வலம்
நான் உத்தரப் பிரதேச எம்.பி., ஆனால், 2017ம் ஆண்டு வரை, உ.பி., மக்களுக்காக என்னை பணியாற்ற விடவில்லை. நீங்கள் அவர்களை மீண்டும் அழைத்து வந்தால், அவர்கள் என்னை உங்களுக்காக வேலை செய்ய விடுவார்களா? அப்படிப்பட்டவர்கள் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமா?
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, உத்தரப் பிரதேசத்தில் மாஃபியாக்கள் என்ன செய்தார்கள்? வியாபாரிகள் வியாபாரம் செய்ய பயந்தனர். அன்றைய காலத்தில் வழிப்பறி, கொள்ளை போன்றவை சகஜம். மக்கள், சூரிய அஸ்தமனத்திற்கு முன் வீட்டிற்கு திரும்பி வாருங்கள் என்று கூறுவார்கள்.
தேர்தலில் படுதோல்வி அடைந்த இந்த குடும்ப அரசியல்வாதிகள் இனி சாதியின் பெயரால் விஷம் பரப்புவார்கள். இப்படிப்பட்டவர்கள் நாற்காலிக்காக தங்கள் சொந்த குடும்பத்துடன் சண்டை போடுகிறார்கள். ஆனால் நீங்கள் ஒன்றை மட்டும் நினைவில் கொள்ள வேண்டும் உ.பி.யின் வளர்ச்சி, நாட்டின் வளர்ச்சி" என்றார்.