காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இந்துக்கள் ஹிஜாப் அணிய வேண்டும் என்ற சட்டம்கூட வரலாம் என கர்நாடக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளில் இந்து மாணவர்களின் எதிர்ப்பினால் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் அங்கு இரு தரப்பினரிடையே போராட்டம் வெடித்துள்ளது.
மேலும், முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மாணவ, மாணவியர் காவிந்துண்டு அணிந்துவந்து போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து மூன்று நாள்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.
பாஜக தரப்பினர் இந்து மாணவர்களுக்கு ஆதரவாகவும், காங்கிரஸ், மஜத உள்ளிட்ட கட்சியினர் முஸ்லிம் மாணவிகளுக்கு ஆதரவாகவும் கருத்துகளை தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், கர்நாடக ஆற்றல் சக்தித் துறை அமைச்சர் சுனில் குமார் இந்த விவகாரம் குறித்து கூறுகையில், 'காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இந்துக்கள் ஹிஜாப் அணிய வேண்டும் என்ற சட்டம் கூட வரலாம். சித்தராமையாவும் காங்கிரசும் இத்தகைய மனநிலையில் இருந்து வெளியே வர வேண்டும்.
கல்லூரி ஒன்றில் தேசியக்கொடி அகற்றப்பட்டதாக டி.கே.சிவகுமார் நேற்று பொய்யான குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார். பொய்யான அறிக்கைகளுக்கே அவர் ஆதரவாக நிற்கிறார்' என்றார்.