சீனா, ஜப்பான், தென் கொரியா, ஹாங்காங், சிங்கப்பூா், தாய்லாந்து ஆகிய நாடுகளின் பயணிகள் இந்தியாவுக்குப் பயணிக்கும்போது ‘கரோனா பாதிப்பின்மை’ சான்றிதழை வழங்க வேண்டியது கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
சீனா உள்ளிட்ட பல நாடுகளில் கரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவில் கரோனா பரவலைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரப்படுத்தியுள்ளன. சீனா, ஜப்பான் உள்ளிட்ட 5 நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வருகை தரும் பயணிகளுக்கு ஆா்டி-பிசிஆா் கரோனா பரிசோதனை ஏற்கெனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சீனா, ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூா், ஹாங்காங், தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வருகை தரும் பயணிகள் ‘கரோனாவால் பாதிக்கப்படவில்லை’ என பரிசோதனை சான்றிதழை வழங்க வேண்டியது கட்டாயம் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா வியாழக்கிழமை அறிவித்தாா்.
இந்தப் புதிய நடைமுறை ஜனவரி 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் அவா் அறிவித்துள்ளாா். விமானப் பயணம் தொடங்குவதற்கு 72 மணி நேரத்துக்கு முன்பாகப் பெறப்பட்ட கரோனா பரிசோதனை சான்றிதழை ‘ஏா் சுவிதா’ வலைதளத்தில் பதிவிட வேண்டும் என சம்பந்தப்பட்ட நாடுகளின் பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சா்வதேச விமான நிலையங்களில் 2 சதவீத வெளிநாட்டுப் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளும் நடைமுறை தொடரும் என்றும் அமைச்சா் மாண்டவியா தெரிவித்துள்ளாா்.