கத்தாரில் நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை போல் இந்தியாவிலும் நடத்தப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் இன்று பிரதமர் மோடி ரூ.2450 கோடி ரூபாய் மதிப்பிலான பல திட்டங்களைத் தொடங்கிவைத்து நாட்டுக்கு அர்ப்பணித்ததுடன் புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார். முன்னதாக, ஷில்லாங்கில் உள்ள மாநில மாநாட்டு மையத்தில் நடைபெற்ற வடகிழக்கு கவுன்சில் கூட்டத்தில் பிரதமர் கலந்து கொண்டு அதன் பொன்விழா கொண்டாட்டங்களிலும் பங்கேற்றார். கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று வரும் வேளையில், இன்றைய இந்த விழா கால்பந்து மைதானத்தில் நடைபெறுவது தற்செயலான நிகழ்வாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இதையும் படிக்க- பல்லுயிர் பாதுகாப்புக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு மிகவும் முக்கியம்: மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ்
ஒருபுறம், கால்பந்து போட்டி நடக்கிறது, அதே நேரத்தில் நாங்கள் கால்பந்து துறையில் வளர்ச்சிக்கான போட்டியை வழிநடத்துகிறோம். உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடந்தாலும், இங்குள்ள மக்களின் உற்சாகம் குறையவில்லை. கத்தாரில் நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் விளையாடும் சர்வதேச அணிகளைப் பார்த்துக் கொண்டிருந்தாலும், இளைஞர்களின் சக்தியை உறுதியாக நம்புவதாகவும், இதுபோன்ற முக்கியமான போட்டியை இந்தியா நடத்தும் நாள் வெகு தொலைவில் இல்லை.
மேலும் ஒவ்வொரு இந்தியரும் அதில் பங்கேற்கும் நமது அணியை அப்போது உற்சாகப்படுத்துவார்கள் என்று அவர் கூறினார். மேலும் கால்பந்தாட்டத்தில் காட்டப்படும் சிவப்பு அட்டை பற்றி குறிப்பிட்ட பிரதமர், வடக்கு கிழக்கின் வளர்ச்சிக்கு இடையூறாக வரும் அனைத்துத் தடைகளுக்கும் அரசு சிவப்பு அட்டை காட்டியுள்ளதாக தெரிவித்தார்.