ஒற்றுமை நடைப்பயணத்தின் 92வது நாளான இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கோட்டா நகரிலிருந்து தனது பயணத்தைத் தொடங்கியுள்ளார்.
காலை 6 மணிக்கு சூரியமுகி ஹனுமன் கோயிலில் பிரார்த்தனையைச் செய்துவிட்டு, தனது ஒற்றுமை நடைப்பயணத்தைத் தொடங்கினார். அவருடன் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் முன்னாள் துணை சச்சின் பைலட் ஆகியோர் இணைந்துகொண்டனர்.
சூர்யமுகி ஹனுமன் கோயிலிருந்து சுமார் 2.5 கி.மீ நடைப்பயணம் மேற்கொண்ட பிறகு, ராஜீவ் காந்தி நகரை அடைந்தார். அங்கு பயிற்சி நிறுவன மாணவர்கள் அவரை வரவேற்றனர்.
ராகுல் காந்தி சாலையோரம் அமைக்கப்பட்டிருந்த மேடையில் ஏறி மாணவர்களுடன் சிறிது நேரம் பேசினார். மாணவர்களை "இந்தியாவின் எதிர்காலம்" என்றார். மேலும் "பாரத் ஜோடோ" கோஷங்களை எழுப்புமாறு கூடியிருந்தவர்களை உற்சாகப்படுத்தினார்.
மாணவர்களைத் தவிர, கட்சித் தொண்டர்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் ஜாக்புராவிலிருந்து விமான நிலையம் வரை சாலையின் இருபுறமும் வரிசையாகக் கூடியிருந்தனர்.
பின்னர், ராஜீவ் காந்தி நகரில் உள்ள அவரது தந்தை ராஜீவ் காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.