ஹிமாசலப் பிரதேசத்தில் பாஜகவைத் தோற்கடித்து காங்கிரஸ் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.
மொத்தமுள்ள 68 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 40 இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. பாஜக 28 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
ஹிமாசலப் பிரதேசத்தில் 68 இடங்களைக் கொண்ட சட்டப்பேரவைக்கு நவம்பா் 12-ஆம் தேதி ஒரே கட்டமாக தோ்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று(டிச. 8) காலை முதல் நடைபெற்றது.
மாலை 7.30 மணிவரை நடைபெற்ற இந்த வாக்கு எண்ணிக்கையில், பாஜகவைத் தோற்கடித்து காங்கிரஸ் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.
காலையில், வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் பாஜக முன்னிலை வகித்த நிலையில், அடுத்தடுத்த சுற்றுகளில் காங்கிரஸ் படிப்படியாக முன்னிலை வகிக்கத் தொடங்கியது.
முதல்வர் ஜெய்ராம் தாக்குர் 37,007 வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து 6 ஆவது முறையாக செராஜ் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். தாக்குர் 52,076 வாக்குகள் பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சேத் ராம் 15,069 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார்.
பாஜகவின் ராகேஷ் குமார் 8,125 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் கட்சியின் சோஹன் லாலைத் தோற்கடித்தார். எனினும் சிம்லா மாவட்டத்தின் 8 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 5 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
வாக்கு எண்ணிக்கையின் முடிவில் காங்கிரஸ் கட்சி 43.90 சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளது. பாஜக 43, மற்றவை 13.1 சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளன.
ஹிமாசலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றிருந்தாலும், பாஜக உடனான வாக்கு வித்தியாசம் 0.90 சதவிகிதமாகவே உள்ளது.
முதல்வய் யார்? காங்கிரஸ் ஆலோசனை:
ஹிமாசலில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஒன்றிணைந்து மாநிலத்தில் காங்கிரஸினை யார் வழிநடத்தப் போகிறார்கள் என்பது குறித்து தீர்மானம் நிறைவேற்ற உள்ளனர்.
ஹிமாசலில் காங்கிரஸினை வழிநடத்தும் தலைவரைத் தேர்ந்தெடுப்பது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. அதன்படி, காங்கிரஸ் தலைவர், யார் ஹிமாசலை வழிநடத்த வேண்டும் என முடிவெடுப்பார் என்பதே அந்தத் தீர்மானம் ஆகும்.