குஜராத் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், அதிக பெரும்பான்மையுடன் பாஜக தொடர்ந்து முன்னிலையில் உள்ளது.
குஜராத்தில் உள்ள 182 தொகுதிகளுக்கு கடந்த 1, 5 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தோ்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி என்று காலை முதல் நடைபெற்று வருகின்றது.
வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே பாஜக முன்னிலை வகித்து வருகின்றது. பெரும்பான்மைக்கு 92 இடங்கள் தேவைப்படும் 17 தொகுதிகளில் வெற்றியும், 140 தொகுதியில் முன்னிலையும் பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பகல் 2 மணி நிலவரப்படி, காங்கிரஸ் 2 தொகுதியில் வெற்றியும், 15 தொகுதிகளில் முன்னிலையும் பெற்றுள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆம் ஆத்மி 5 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளன.
நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மோர்பி தொகுதியில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. பாஜக முதல்வர் வேட்பாளர் பூபேந்திர படேல், ஹர்திக் படேல், ரிவாபா ஜடேஜா ஆகியோரின் வெற்றி வாய்ப்பு உறுதியாகியுள்ளது.
தொடர்ந்து, டிசம்பர் 12ஆம் தேதி பாஜக தலைமையில் ஆட்சி மீண்டும் பதவியேற்கும் என்று பாஜக அறிவித்துள்ளது.
குஜராத் தேர்தலில் பாஜகவின் வெற்றி உறுதியாகியுள்ள நிலையில், பாஜக அலுவலகங்களிலும், வாக்கு எண்ணும் மையங்களுக்கு வெளியேவும் தொண்டர்கள் வெற்றியை கொண்டாட தொடங்கிவிட்டனர்.
குஜராத் மாநிலத்தை பொறுத்தவரை 1985 சட்டப்பேரவை தேர்தல் 149 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. பாஜகவை பொறுத்தவரை 2002 சட்டப்பேரவை தேர்தலில் 127 தொகுதிகளை கைப்பற்றி மோடி தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்டது.
இந்த தேர்தலில் 150 தொகுதிகளுக்கு மேல் பாஜக கைப்பற்றும் பட்சத்தில் புதிய சாதனையை பாஜக படைக்கும்.