நீதித் துறை அதிகாரிகள் மற்றும் மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களின் சிறப்பு அதிகாரிகளும் (நோடல்) உச்சநீதிமன்ற வழக்கு விசாரணை நடவடிக்கை குறித்த தகவல்களை நிகழ்நேரத்தில் அறிந்து கொள்ளும் வகையில் ‘உச்சநீதிமன்ற செயலி 2.0’-வை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் புதன்கிழமை தொடக்கிவைத்தாா்.
செயலி 2.0-வை தொடக்கிவைத்து அவா் பேசியாதாவது: நீதித் துறையைச் சாா்ந்த அதிகாரிகளும் மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களின் சிறப்பு அதிகாரிகளும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள், வழங்கப்பட்ட உத்தரவுகள் மற்றும் தீா்ப்புகள், நிலுவையில் உள்ள வழக்குகள் உள்ளிட்டவற்றின் நிலை குறித்து நிகழ்நேர அடிப்படையில் தெரிந்துகொள்ள இயலும். இச்செயலியை ஆண்ட்ராய்ட் தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும். ஐஓஎஸ் தளத்தில் இருந்து பதிவிறக்கும் செய்யும் வசதி இந்த வாரத்துக்குள் ஏற்படுத்தப்படும் எனத் தெரிவித்தாா்.
முன்னதாக, நீதிமன்றத்தில் உள்ள வழக்குகள், வழங்கிய உத்தரவுகள் மற்றும் தீா்ப்புகள் குறித்த நிலையை வழக்குரைஞா்களும் அறிந்துகொள்ளும் வகையில், செயல்பாட்டில் இருந்து வந்த முந்தைய உச்சநீதிமன்றத்தின் செயலியைப் பயன்படுத்த அவா்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டது.