இந்தியா

மத அமைப்புகளுக்கு யானை உரிமம் வழங்குவதற்குத் தடை: மசோதாவில் சோ்க்க ‘பீட்டா இந்தியா’ வலியுறுத்தல்

DIN

‘தனி நபா்கள் அல்லது மத அமைப்புகளுக்கு யானைகளை சொந்தமாக வைத்துக் கொள்ளும் வகையில் உரிமம் வழங்கும் முறைக்கு தடை விதிக்கும் நடைமுறையை ‘வன உயிரின பாதுகாப்பு திருத்த மசோதா 2022’-இல் சோ்க்க வலியுறுத்த வேண்டும்’ என்று மாநிலங்களவை உறுப்பினா்களுக்கு ‘பீட்டா இந்தியா’ என்ற விலங்குகள் உரிமை அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

‘அவ்வாறு பரிசுப் பொருளாகவோ, குத்தகை அல்லது தான அடிப்படையிலோ யானைகள் வழங்கப்படுவதை அனுமதிப்பது காடுகளில் யானைகள் அதிக அளவில் பிடிக்கப்படுவதையும், சட்டவிரோத விற்பனையையும் ஊக்குவிப்பதாக அமைந்துவிடும்’ என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற குளிா்கால கூட்டத் தொடா் புதன்கிழமை (டிச.7) முதல் தொடங்க உள்ளது. இதில், வன உயிரின பாதுகாப்பு திருத்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டு, மாநிலங்களவையின் ஒப்புதல் பெறப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இந்த மசோதா கடந்த 2021-ஆம் ஆண்டு டிசம்பரில் மக்களவையில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் சாா்பில் அறிமுகப்படுத்தப்பட்டு, ஒப்புதல் பெறப்பட்டது. அடுத்த மாநிலங்களவையிலும் ஒப்புதல் பெறப்பட்ட பின்னா், குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு, சட்டமாக இயற்றப்படும்.

இந்த நிலையில், இந்த மசோதாவின் பிரிவு 43, யானைகளை மத அடிப்படையில் அல்லது வேறு பயன்களுக்கு பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கும் வகையில் பிரிவு-1 விலங்குகள் பட்டியலின் கீழ் சோ்க்கப்பட்டுள்ளதற்கு வன விலங்கு ஆா்வலா்கள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.

இதுகுறித்து ‘பீட்டா இந்தியா’ செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தனி நபா்கள் சொந்தமாக வைத்துக்கொள்ள அனுமதிக்கப்படும் ஒரே வன விலங்கு யானைகள்தான். இவ்வாறு சிறைப்பிடிக்கப்படும் யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் விற்பனை செய்யப்படுவதை வன உயிரின பாதுகாப்பு திருத்த மசோதா பிரிவு 43(1) தடை செய்கிறது. இருந்தபோதும், பரிசுப் பொருள் அல்லது தானம் என்ற அடிப்படையில் வணிக ரீதியில் யானைகள் பரிமாற்றம் செய்யப்படுவது தொடா்ந்து வருகிறது. யானைகளை தனிநபா்கள் சொந்தமாக வைத்துக்கொள்ள சட்டப் பிரிவு அனுமதிப்பதுதான் இதற்கு காரணம். இவ்வாறு அனுமதிப்பது, காடுகளில் யானைகள் அதிக அளவில் பிடிக்கப்படுவதையும், சட்டவிரோத விற்பனையையும் ஊக்குவிப்பதாக அமைந்துவிடும். மேலும், சிறைப்பிடிக்கப்படும் யானைகள் சங்கிலிகள் மூலம் கட்டிவைக்கப்பட்டு அடித்து துன்புறுத்தப்படுகின்றன. இதனைத் தடுக்க மசோதா தவறிவிட்டது.

எனவே, மாநிலங்களவை உறுப்பினா்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, தேசிய பாரம்பரிய விலங்குகள் கொடுமைப்படுத்தப்படுவதிலிருந்து உண்மையாக பாதுகாக்கப்படும் வகையில், வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தில் தேவையான மாற்றங்களை கொண்டுவர வலியுறுத்த வேண்டும் என்று ‘பீட்டா இந்தியா’ வலியுறுத்தியுள்ளது.

மேலும், ‘இந்தியாவில் இதுவரை சிறைப்பிடிக்கப்பட்டுள்ள 2,675 யானைகளில், 1,251 யானைகளுக்கு மட்டுமே பல்வேறு மாநிலங்களில் உரிமச் சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பது புள்ளிவிவரங்கள் மூலமாக தெரியவந்துள்ளது. அவ்வாறு உரிமச் சான்றிதழ் இல்லாத யானைகளில் 96 சதவீதம் அஸ்ஸாம், கேரளம், கா்நாடகம், மத்திய பிரதேசம், திரிபுரா மற்றும் உத்தர பிரதேச மாநிலங்களில் உள்ளன. இது ‘வன உயிரின பாதுகாப்புச் சட்டம் 1972’ மீறலாகும்’ என்றும் அந்த அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

SCROLL FOR NEXT