கா்நாடகம்-மகாராஷ்டிரம் இடையேயான பிரச்னை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் முறையிடப்பட்டுள்ளதாக மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் தேவேந்திர பட்னவீஸ் தெரிவித்துள்ளார்.
1957-ஆம் ஆண்டு மொழிவாரியாக கா்நாடக-மகாராஷ்டிர மாநிலங்கள் பிரிக்கப்பட்டதில் இருந்து இரு மாநிலங்களுக்கு இடையே எல்லை கிராமங்கள் தொடா்பான பிரச்னை நிலவி வருகிறது.
குறிப்பாக கா்நாடகத்தில் உள்ள பெலகாவி நகருக்கும், அந்த மாநிலத்தில் உள்ள 814 மராத்தி மொழி பேசும் மாநிலங்களுக்கும் மகாராஷ்டிரம் உரிமைக் கோரி வரும் நிலையில் கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை, மகாராஷ்டிரத்தில் உள்ள அக்கல்கோட் மற்றும் சோலாப்பூா் மாவட்டத்தில் உள்ள கன்னடம் பேசும் மக்கள் வாழும் பகுதிகள் கா்நாடகத்துடன் இணைக்கப்பட வேண்டும் என்று தெரிவித்த கருத்து பூதாகரமானது.
இதையும் படிக்க | வெறுப்பு அரசியலை மக்கள் விரும்புவதில்லை: பகவந்த்மான்
இதைத் தொடா்ந்து ஓய்ந்திருந்த மகாராஷ்டிர - கா்நாடக எல்லைப் பிரச்னை மீண்டும் தீவிரமடையத் தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக பெலகாவிக்கு செல்வதாக மகாராஷ்டிர அமைச்சா்கள் தெரிவித்த நிலையில் இதற்கு கர்நாடக அரசு தடை விதித்தது.
அதையடுத்து இரு மாநிலங்களிலும் எல்லையைக் கடக்கும் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தை முன்வைத்து இரு மாநிலங்களிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் மகாராஷ்டிர மாநில வாகனங்கள் கர்நாடகத்தில் தாக்கப்பட்டது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதாக மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர பட்னவீஸ் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | உலகத் தலைவர்களை எச்சரிக்கும் விஞ்ஞானிகள்: காரணம் என்ன?
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நடப்பு நிகழ்வுகள் அனைத்தையும் உள்துறை அமைச்சரிடம் தெரிவித்துள்ளேன். எந்தவிதமான காரணமுமின்றி மகாராஷ்டிர வாகனங்கள் தாக்கப்பட்டது குறித்து அவரிடம் தெரிவித்துள்ளேன். இதுதொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்க கர்நாடக முதல்வரிடம் பேச வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளேன்” என்றார்.