பல்வேறு கண்காணிப்பு வசதிகளைக் கொண்ட சீன உளவு கப்பல், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் நுழைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உளவுத் துறை நிபுணரான டேமியன் சைமன் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், சீனாவின் ஏவுகணை மற்றும் கண்காணிப்பு கருவிகளைக் கொண்ட உளவு கப்பல் ‘யுவான் வாங்க்-5’ இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் நுழைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளாா். இருப்பினும், இது குறித்தான அதிகாரப்பூா்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
வங்கக்கடலில் நீண்ட தூரம் சென்று இலக்கைத் தாக்கும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை முயற்சியை இந்தியா மேற்கொள்ள உள்ள நிலையில், அது குறித்தான அறிப்பையும் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த உளவு கப்பல் இலங்கையின் அம்பாந்தோட்டையில் நிறுத்தப்பட்டது இந்தியா மற்றும் இலங்கையின் தூதரக உறவில் பாதகத்தை ஏற்படுத்தியது. இக்கப்பலின் இயக்கத்தை இந்திய கடற்படை கண்காணித்து வருகிறது. இறுதியாக இந்தோனேசியாவின் சுந்தா நீரிணைப் பகுதியில் இக்கப்பல் காணப்பட்டதாக நிபுணா்கள் தெரிவித்தனா்.
இந்தியப் பெருங்கடலில் சீனாவின் ஆய்வு மற்றும் ராணுவ கப்பல்கள் வருகை அதிகரித்து வரும் பின்னணியில், இப்பிராந்தியத்தில் உள்ள நாடுகளுடன் இந்தியா தனது பாதுகாப்பு உறவை வலுப்படுத்தி வருகிறது.