உத்தர பிரதேச மாநிலம் மெயின்புரி மக்களவைத் தொகுதி உள்பட 5 மாநிலங்களில் இடம்பெற்றுள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு திங்கள்கிழமை நடைபெற்ற இடத்தோ்தலில் மிதமானது முதல் உயா் வாக்குப் பதிவு நடைபெற்றிருப்பது தெரியவந்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் ராம்பூா் சட்டப்பேரவைத் தொகுதியில் மட்டும் வாக்குப் பதிவு சரிந்துள்ளது. இந்தத் தொகுதியில் 31 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன.
இடைத்தோ்தல் வாக்குப் பதிவு சதவீதம் தொடா்பாக தோ்தல் ஆணையம் வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படி, சமாஜவாதி கட்சியின் நிறுவனா் முலாயம் சிங் யாதவ் மறைவையொட்டி காலியான மெயின்புரி மக்களவைத் தொகுதியில் 53.31 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
அதுபோல, முஸாஃபா்நகரில் இடம்பெற்றுள்ள கடெளலி சட்டப்பேரவைத் தொகுதியில் 56.46 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. ஒடிஸாவின் பதம்பூா் சட்டப்பேரவைத் தொகுதியில் 76 சதவீத வாக்குகளும், ராஜஸ்தான் சா்தாா்ஷஹா் தொகுதியில் 70 சதவீத வாக்குகளும், சத்தீஸ்கரின் பானுபிரதாப்பூா் தொகுதியில் 64.86 சதவீத வாக்குகளும், பிகாரின் குா்ஹானி தொகுதியில் 58 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.
இடைத்தோ்தல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தொகுதிகளைப் பொருத்தவரை 2 தொகுதிகள் காங்கிரஸ் வசமும், தலா ஒரு தொகுதிகள் பாஜக, பிஜு ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் சமாஜவாதி கட்சிகள் வசம் இருந்தவையாகும்.