ஐசிஎம்ஆர் இணையதளத்தை முடக்க ஒரே நாளில் 6 ஆயிரம் முறை சீனாவைச் சேர்ந்த ஹேக்கர்கள் முயற்சித்துள்ளனர்.
கடந்த சில நாள்களுக்கு முன்பு எய்ம்ஸ் மருத்துவமனை இணையதளத்தை ஹேக்கர்கள் முடக்கி பணம் கொடுக்க வலியுறுத்திய நிலையில், தற்போது
ஐசிஎம்ஆர் இணையதளத்தை முடக்க ஹேக்கர்கள் முயற்சி செய்துள்ளனர்.
எனினும், ஐசிஎம்ஆர் இணையதளம் மேம்பட்ட ஃபையர்வால்களைக் கொண்டுள்ளதால், எளிதில் முடக்க இயலாது என ஐசிஎம்ஆர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை சர்வரை முடக்கி, ரூ.200 கோடி மதிப்புள்ள கிரிப்டோகரன்சியை ஹேக்கர்கள் கோரினர். அதனைத் தொடர்ந்து தற்போது ஐசிஎம்ஆர் இணையதளத்தை முடக்க ஹேக்கர்கள் முயற்சி செய்துள்ளனர்.
நவம்பர் 30ஆம் தேதி மட்டும் ஐசிஎம்ஆர் இணையதளத்தை முடக்க 6000 முறை ஹேக்கர்கள் முயற்சித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹாங்காங்கை சேர்ந்தவர்கள் என்றும் அரசுத் துறை வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
எனினும் ஐசிஎம்ஆர் இணையதளத்தை முடக்கும் ஹேக்கர்களின் முயற்சி தோல்வியடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேம்பட்ட ஃபையர்வால்களைக் கொண்டுள்ளதால் ஐசிஎம்ஆர் இணையதளத்தை முடக்க இயலாது என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
ஐசிஎம்ஆர் இணையதளம் பாதுகாப்பாக உள்ளதாகவும், இணையவழித் தாக்குதல் தடுக்கப்பட்டதாகவும் அரசுத் துறை தகவல் தெரிவித்துள்ளது.