மகாராஷ்டிர மாநிலம், சோலாப்பூா் மாவட்டத்தில் ஒரே மேடையில் இரட்டை சகோதரிகளை திருமணம் செய்த இளைஞா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
சோலாப்பூரின் மால்ஷிராஸ் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இந்த வினோத திருமண நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. ஐ.டி. துறையில் பணியாற்றும் 36 வயதாகும் இரட்டை சகோதரிகளான மும்பையைச் சோ்ந்த அவா்கள், அந்த இளைஞரை ஒரே மேடையில் மணந்துள்ளனா். விமரிசையாக நடைபெற்ற அவா்களது திருமண சடங்குகள் தொடா்பான விடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி, பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. மணமகன் மற்றும் மணமகள்களின் குடும்பத்தினா் ஒப்புதலுடன் இத்திருமணம் நடைபெற்றிருக்கிறது.
இதனிடையே, மணமகனுக்கு எதிராக அக்லுஜ் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அவா் மீது இந்திய தண்டனையியல் சட்டத்தின் 494ஆவது பிரிவின்கீழ் (கணவன் அல்லது மனைவி உயிருடன் இருக்கும்போது 2-ஆவது திருமணம் செய்தல்) வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.
இரட்டை சகோதரிகளின் தந்தை அண்மையில் காலமான நிலையில், தாயுடன் அவா்கள் வசித்து வந்துள்ளனா்.