தில்லியில் மாநகராட்சி தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், வடமேற்கு தில்லியிலுள்ள மக்கள் மாநகராட்சித் தேர்தலை புறக்கணித்துள்ளனர்.
தில்லி வடமேற்கு பகுதியில் அடிப்படை வசதிகளில் ஒன்றுகூட அரசு பூர்த்திசெய்யவில்லை என்பதால், மக்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர்.
தில்லியில் மாநகராட்சித் தேர்தல் இன்று (டிச.4) நடைபெற்றது. தில்லியில் உள்ள மாநகராட்சியின் 250 வாா்டுகளுக்கு தேர்தல் நடைபெற்றது. தில்லி முழுவதும் 13,638 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5.30 மணி வரை நடைபெற்றது. தில்லியில் வடக்கு, தெற்கு, கிழக்கு என 3ஆக இருந்த மாநகராட்சி ஒன்றாக இணைக்கப்பட்டு தேர்தல் நடைபெற்றது.
தில்லி மாநகராட்சி தேர்தலில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 7ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
இந்நிலையில், தில்லியின் கதேவாரா கிராமத்திலுள்ள மக்கள் மாநகராட்சி தேர்தலில் வாக்களிக்காமல் புறக்கணித்தனர். கிராமத்தில் சாலை வசதிகள், கழிவுநீர் வசதி, விளக்குகள் போன்ற அடிப்படை வசதிகளைக் கூட அரசு செய்துதரவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மாநகராட்சி தேர்தலையொட்டி கூட எங்களின் அடிப்படை வசதிகள் குறித்து அரசு அக்கறை கொள்ளவில்லை என்பதால், தேர்தலில் வாக்களிக்கப்போவதில்லை என்ற முடிவை அந்த கிராம மக்கள் எடுத்துள்ளனர்.
தில்லி மாநகராட்சி தேர்தலை புறக்கணித்துள்ள வடமேற்கு தில்லி மக்கள், 2024ஆம் ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலையும் புறக்கணிப்பார்களா என்று கேள்வி எழுந்துள்ளது.