குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இரண்டு நாள் பயணமாக டிசம்பர் 4, 5 தேதிகளில் ஆந்திரத்துக்குப் பயணம் மேற்கொள்கிறார்.
முர்மு குடியரசுத் தலைவராகப் பதவியேற்று ஆந்திரத்துக்குச் செல்வது இதுவே முதல் முறையாகும். ஞாயிற்றுக்கிழமை காலை 10.15-க்கு கன்னவரம் விமான நிலையத்தில் ஆளுநர் மற்றும் முதல்வர் அவரை வரவேற்க உள்ளனர்.
பொரங்கியில் உள்ள முரளி கன்வென்ஷன் சென்டரில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டு, இதைத் தொடர்ந்து ஆளுநர் தலைமையில் அவருக்கு விருந்து அளிக்கப்படுகிறது.
பின்னர் பிற்பகல் 2.30 மணிக்கு விசாகப்பட்டினம் செல்லும் அவர் பல்வேறு நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். விசாகப்பட்டினத்தில் கடற்படை தின நிகழ்ச்சியில் கடற்படை அணிவகுப்பை ஆய்வு செய்கிறார்.
இதையடுத்து, திருப்பதிக்குச் செல்கிறார். திங்கள்கிழமை காலை வெங்கடாசலபதியை தரிசனம் செய்கிறார். பின்னர் திருப்பதியில் கட்டப்பட்டுள்ள நான்கு வழி ரயில்வே மேம்பாலம் மற்றும் பிற சாலைகளையும் அவர் திறந்து வைக்க உள்ளார்.
முர்முவின் வருகையையொட்டி திருப்பதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.