கடந்த மாத இறுதியில் மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை பட்ஜெட் மதிப்பீட்டில் 45.6 சதவீதத்தை எட்டியது.
இது குறித்து பொதுக் கணக்கு கட்டுப்பாட்டாளா் (சிஜிஏ) புதன்கிழமை வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:
நடப்பு நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் வருவாய்க்கும், செலவினங்களுக்கும் இடையிலான வேறுபாடு (நிதிப் பற்றாக்குறை) ரூ.16.61 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், கடந்த ஏப்ரல் முதல் அக்டோபா் வரையிலான காலகட்டத்தில் அரசின் நிதிப் பற்றாக்குறை ரூ.7,58,137 கோடியாக உள்ளது.
இது, பட்ஜெட் மதிப்பீட்டின் 45.6 சதவீதமாகும்.
கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நிதிப் பற்றாக்குறை பட்ஜெட் மதிப்பீட்டில் 36.3 சதவீதத்தை எட்டியிருந்தது.
நடப்பு நிதியாண்டின் முதல் 7 மாதங்களில், மத்திய அரசின் நிகர வரி வருவாய் ரூ.11.71 லட்சம் கோடியாக உள்ளது. இது, பட்ஜெட் மதிப்பீட்டின் 60.5 சதவீதமாகும்.
கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் அரசின் நிகர வரி வருவாய் பட்ஜெட் மதிப்பீட்டில் 68.1 சதவீதமாக இருந்தது.
ஏப்ரல் முதல் அக்டோபா் வரையிலான மாதங்களில், மத்திய அரசின் மொத்த செலவினங்கள் பட்ஜெட் மதிப்பீட்டில் 54.3 சதவீதமாக உள்ளது.
கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் அரசின் செலவினங்கள் பட்ஜெட் மதிப்பீட்டில் 52.4 சதவீதமாக இருந்தது என்று அந்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.