காங்கிரஸுக்கு நல்ல திட்டங்களை தாமதப்படுத்துவது மற்றும் மக்களை தவறாக வழிநடத்துவதில் மட்டுமே நம்பிக்கை உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
நாட்டில் உள்ள ஏழை மக்களிடம் கொள்ளையடித்தவர்கள் தற்போது ஊழலுக்கு முடிவுகட்ட போராடி வரும் என்மீது குற்றம் கண்டுபிடித்து வருகின்றனர் எனவும் தெரிவித்தார். குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் இரண்டாம் கட்ட தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர் இதனை தெரிவித்தார்.
பிரசாரத்தின்போது அவர் பேசியதாவது: நர்மதா நதி நீரை குஜராத்தின் குடிநீர் பற்றாக்குறை உள்ள இடங்களுக்கு கொண்டுவர காங்கிரஸ் ஆர்வம் காட்டவில்லை. காங்கிரஸ் நல்ல திட்டங்களை தாமதப்படுத்துவது மற்றும் மக்களை தவறாக வழிநடத்துவதில் மட்டுமே நம்பிக்கை வைத்துள்ளது. சர்தார் சரோவர் அணை கட்டும் திட்டத்தினையும் காங்கிரஸ் கிடப்பில் போட முயற்சி செய்தது. வழக்குகளின் மூலம் அந்தத் திட்டத்தினை காலம் தாழ்த்தியது. பனஸ்கந்தா மக்களுக்கு குடிநீர் கிடைப்பதை தடுக்க நினைத்த காங்கிரஸினை மக்கள் மன்னிக்க மாட்டார்கள். காங்கிரஸ் தண்டிக்கப்பட வேண்டும். வாக்கு செலுத்தும்போது இதை நீங்கள் மறக்க மாட்டீர்கள் என நம்புகிறேன்.
காங்கிரஸுக்கு இதுபோன்ற விஷயங்களில் எல்லாம் ஆர்வம் கிடையாது. அவர்களுக்கு வாய்ப்புகளை பயன்படுத்தி பணம் சம்பாதிக்க வேண்டும். எனது தலைமையிலான அரசு 1 லட்சம் கோடி ரூபாய் செலவில் 99 குடிநீர் சம்பந்தப்பட்ட திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. பாஜக குஜராத்தில் கண்டிப்பாக வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்றார்.
குஜராத்தில் டிசம்பர் 5 ஆம் தேதி இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.