குஜராத்தில் தலித்துகள், பழங்குடியினருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதால் காலியாக உள்ள அரசுப் பணியிடங்களை பாஜக நிரப்பாமல் உள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டியுள்ளார்.
குஜராத் மாநிலத்தில் சட்டபேரவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. அம்மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸும், பாஜகவும், ஆம் ஆத்மியும் தீவிரமாக முயன்று வருகின்றன.
இந்நிலையில் ஆரவல்லி மாவட்டத்தில் உள்ள பிலோடா சட்டப்பேரவைக்குட்பட்ட பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பாஜகவை கடுமையாக விமர்சித்தார். தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், பாஜக ஆளும் மாநிலங்களில் தலித்துகள் மற்றும் ஆதிவாசிகளுக்கு எதிரான குற்றங்கள் 17 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
மேலும் அவர், இரட்டை என்ஜின் நிர்வாகம் பற்றி பிரதமர் மோடி பேசுகிறார். மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சியில் இருந்தால் வளர்ச்சி ஏற்படும் என கூறுகிறார். அப்படியென்றால் குஜராத் ஏன் முன்னேறவில்லை. 6 ஆண்டுகளில் எதற்கு 3 முதல்வர்கள் இருந்தனர்? என கேள்வி எழுப்பினார்.
இதையும் படிக்க | ‘ரத்தம்’ பட டீசரில் இடம் பெற்றுள்ள முன்னணி இயக்குநர்கள்
தொடர்ந்து பேசிய அவர், “பணவீக்கமும், வேலையின்மையும் அதிகரித்துள்ளன. காலியாக உள்ள 5 லட்சம் அரசுப் பணியிடங்களை நிரப்பினால் தலித்துகளுக்கும், ஆதிவாசிகளுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதால் அதனை நிரப்பாமல் பாஜக ஏமாற்றி வருகிறது என மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
குஜராத் மாநிலத்தில் எஞ்சிய 93 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 5ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் டிசம்பர் 8ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளன.