காங்கிரஸ் ஒற்றுமை நடைப்பயணத்தின் ஒருபகுதியாக நடமாடும் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.
பாரத் ஜோடோ யாத்திரையின் போது ஓய்வு நேரத்தில் படிக்க விரும்புவோருக்கு வாய்ப்பளிக்கும் வகையில் சுமார் 1000 புத்தகங்கள் அடங்கிய நூலக வசதி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நூலகத்தில் அரசியல், வரலாறு, ஆன்மிகம், புனைகதை மற்றும் தலைசிறந்த தலைவர்களின் சுயசரிதைகள் போன்ற தலைப்புகளில் புத்தகங்கள் அடங்கிய பல்வேறு பிரிவுகள் உள்ளன என்று அகில இந்திய மகிளா காங்கிரஸின் தேசிய சட்ட உதவி ஒருங்கிணைப்பாளர் அவனி பன்சால் நடைப்பயணத்தின் போது செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதுதொடர்பாக பன்சால் கூறுகையில்,
இந்தியா என்ற எண்ணத்தை மக்களின் வாழ்வில் நிரந்தரமாக மாற்றும் நோக்கத்துடன் இது அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நூலகம் செயல்பட்டு வந்தாலும், மத்தியப் பிரதேச பயணத்தின் போது ராகுல் காந்தியால் முறையாக திறந்துவைக்கப்படும்.
யாத்திரைக்குப் பிறகு நாடு முழுவதும் இதுபோன்ற 500 பாராத் ஜோடோ நூலகங்களை காங்கிரஸ் நிறுவ உள்ளது.
நூலகத்தின் முன்பகுதியில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் புகைப்படமும், பக்கவாட்டில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படமும் இடம்பெற்றுள்ளன.
வாசகர்களின் வசதிக்காகப் புத்தக அலமாரிகளுக்கு அருகில் சிறிய மேசைகளுடன் இரண்டு சோஃபாக்களும் வைக்கப்பட்டுள்ளன.
முன்னாள் பிரதமர்கள் ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி ஆகியோரின் வாழ்க்கைக்கு அர்ப்பணிக்கப்பட்ட புத்தகங்களும் நூலகத்தில் இடம்பெற்றுள்ளன.
17 யாத்திரை பங்கேற்பாளர்கள் கொண்ட குழுவால் இந்த நடமாடும் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. அறிவைப் பெற அனைத்து அரசியல் ஊழியர்களும் படிக்க வேண்டிய புத்தகங்களின் தொகுப்பு இதில் உள்ளது.
நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் வாசிப்பு பற்றிய செய்தியை பரப்பப் புத்தகங்களை நன்கொடையாக வழங்க வேண்டிய அவசியம் உள்ளது. மேலும், மாநில தலைமையகத்தில் நூலகங்கள் அமைக்கவும் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது என்று அவர் கூறினார்.