குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவின்போது, இருவர் உதவியுடன் 104 வயது முதியவர் வாக்களித்த புகைப்படம் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
182 தொகுதிகளைக் கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு இன்று (டிச.1) முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. எஞ்சிய 93 தொகுதிகளுக்கு டிசம்பர் 5ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதில், 89 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று (டிச.1) நடைபெற்றது. காலை 8 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெற்றது. மாலை 5 மணி வரை 56.88 சதவிகித வாக்குகள் பதிவாகின.
மற்ற மாவட்டங்களை விட பழங்குடியினப் பகுதியில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. புதிய வாக்காளர்கள் பலர் வாக்களித்தனர். அதேபோன்று மூத்த குடிமக்களும் வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்களித்தனர்.
அந்தவகையில், ராம்ஜி பாய் என்ற 104 வயது முதியவர் இருவரின் உதவியுடன் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.