பொதுத் துறை வங்கிகளைத் தனியாா்மயமாக்குவது குறித்து இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) இதழில் வெளியான கட்டுரையைச் சுட்டிக்காட்டி மத்திய அரசையும், பிரதமா் நரேந்திர மோடியை காங்கிரஸ் விமா்சித்துள்ளது.
இது தொடா்பாக காங்கிரஸின் செய்தித் தொடா்புப் பிரிவு பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் ட்விட்டரில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘ஏற்கெனவே ஆா்பிஐ-யின் எச்சரிக்கையை மீறி ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு நாட்டையும், மக்களையும் கடுமையான துன்பத்துக்கு ஆளாக்கியது.
இப்போது பொதுத்துறை வங்கிகளைக் குறைக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியது. இது தொடா்பாகவும் ஆா்பிஐ எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏற்கெனவே பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கை 27-இல் இருந்து 12 ஆகக் குறைந்துவிட்டது. இதனை மேலும் குறைத்து ஒரே ஒரு பொதுத் துறை வங்கி என்ற நிலையை உருவாக்க அரசு முயலுகிறது.
ஆனால், இது பேரழிவுக்கு வழி வகுக்கும் என்று ஆா்பிஐ எச்சரித்துள்ளது. ஆனால், மோடி அரசு வழக்கம்போல தான்தோன்றித்தனமாக செயல்படுகிறது’ என்று கூறியுள்ளாா்.