வணிக நோக்கங்களுக்காக ரயில் பயணிகளின் தகவல்களை இந்தியன் ரயில்வே தனியாருக்கு விற்பனை செய்ய உள்ளதாக பரவும் தகவல்கள் முற்றிலும் கற்பனையானது என்று இந்திய ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.
புதிய வணிகத்தைத் தொடங்குவது, எதிர்காலத்தில் கொண்டு வர வேண்டிய புதிய திட்டங்கள் குறித்து மட்டுமே ஆலோசனை கோரப்பட்டிருப்பதாகவும், பயணிகளின் விவரங்களை விற்பனை செய்யும் எந்த திட்டமும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியன் ரயில்வே நிறுவனத்திற்கு சொந்தமான ஐஆர்சிடிசி இணையதளத்தில் பயணிகள் ரயில் முன்பதிவை மேற்கொண்டு வருகின்றனர். இதில் பயணிகளின் பெயர், வயது, முகவரி, அலைபேசி எண்கள் உள்ளிட்ட பல தகவல்களை இந்தியன் ரயில்வே பெற்று முன்பதிவை மேற்கொள்கிறது.
இதையும் படிக்க.. பயணிகளின் தரவுகளை தனியாருக்கு விற்கும் இந்தியன் ரயில்வே?
இந்நிலையில் பயணிகளின் தரவுகளை விற்பனை செய்வதற்கு தனியார் நிறுவனங்களிடம் இந்தியன் ரயில்வே டெண்டர் கோரியுள்ளதாகவும், வருவாயை அதிகரிக்கும் முயற்சியாக பயணிகளின் தரவுகளை தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்யவிருப்பதாகவும் இதன் மூலம் ரூ.1,000 கோடி வருவாய் ஈட்ட திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
சுற்றுலா, தங்குமிடம், நிதி, உள்கட்டமைப்பு வளர்ச்சி, காப்பீட்டுத்துறை, சுகாதாரம், உற்பத்தி, விமானம் மற்றும் கப்பல் போக்குவரத்து, ஆற்றல் உருவாக்கம் உள்ளிட்ட துறைகளில் பயணிகளின் இந்தத் தரவுகள் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளதாகவும் அந்த தகவலில் தெரிவித்திருந்தது. இந்த திட்டத்தின் மூலம் ரூ.1000 கோடி வரை வருவாய் ஈட்டப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறியிருந்தது.
மக்களின் தரவுகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய அரசு வருவாய் ஆதாரத்திற்காக தனியார் நிறுவனங்களிடம் விற்பனையில் ஈடுபடுவதாக, இந்த தகவலுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், இந்த தகவலை ஒட்டுமொத்தமாக மறுத்திருக்கும் இந்திய ரயில்வே, இது முற்றிலும் கற்பனையானது என்று குறிப்பிட்டுள்ளது.