மத்திய மும்பையில் 16 வயது சிறுவன் குழந்தைகள் காப்பகத்தில் தங்கியுள்ள சக சிறுவர்களால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு சிறுவர்களை காவல் துறையினர் தங்களது காவலில் வைத்துள்ளனர். இந்த அதிர்ச்சி சம்பவம் மும்பையின் மட்டுங்கா பகுதியில் உள்ள டேவிட் சசூன் குழந்தைகள் காப்பகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை நிகழ்ந்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காப்பகத்தில் அடித்துக் கொல்லப்பட்ட சிறுவன் ஹன்ஸ்வான் ராஜ்குமார் நிசாத் ஆவார். நிசாத்தினை அடித்துக் கொன்ற 4 சிறுவர்களின் வயதும் 12லிருந்து 17 வயது நிரம்பியவர்கள்கள். தனியறையில் வைத்து தாக்கப்பட்டுள்ள நிசாத் சிறிது நேரத்தில் மயக்கமடைந்து சுய நினைவை இழந்துவிட்டதாகவும், பின்னர் மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: பயணிகளின் தரவுகளை தனியாருக்கு விற்கும் இந்தியன் ரயில்வே?
ஆரம்பத்தில் சிவாஜி நகர் காவல் துறை அதிகாரிகள் இதனை எதிர்பாராத விதமாக நடந்த நிகழ்வாக வழக்குப் பதிவு செய்தனர். பின்னர், குழந்தைகள் காப்பத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை சோதித்தபோது நிசாத் தனியறையில் கொடூரமாக இந்த நான்கு சிறுவர்களால் தாக்கப்படுவது தெரிய வந்தது. இதனையடுத்து, இந்த சிறுவர்கள் மீது இந்திய குற்றவியல் தண்டனைச் சட்டம் பிரிவு 302ன் கீழ் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நிசாத் தெற்கு மும்பை காவல் துறையினரால் கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதி இந்தக் காப்பகத்தில் சேர்க்கப்படுள்ளார். நிசாத் மனநிலை பாதிக்கப்பட்டவர் எனக் கூறப்படுகிறது. இந்த குழந்தைகள் காப்பகத்தில் புதிதாக சேர்க்கப்படுபவர்கள் தனிமைப்படுத்துதல் அறையில் 15 நாட்கள் தங்கியிருக்க வேண்டும். கரோனா உச்சத்தில் இருந்தபோது இந்த நடைமுறை பின்பற்றப்பட்டுள்ளது. அதன்படி, நிசாத் தனிமைப்படுத்துதல் அறையில் தங்க வைக்கப்பட்டுள்ளார். நிசாத் உடன் புதிதாக இந்த 4 சிறுவர்களும் தனிமைப்படுத்துதல் அறையில் தங்க வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.