ஆன்ட்ரிக்ஸ் ஒப்பந்த ரத்து விவகாரத்தில் அமெரிக்காவைச் சோ்ந்த தேவாஸ் மல்டிமீடியா நிறுவனம் ரூ. 69 லட்சம் இழப்பீட்டை கைப்பற்றியுள்ளது.
தேவாஸ் மல்டிமீடியா நிறுவனம் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) வா்த்தக அமைப்பான ஆன்ட்ரிக்ஸுடன் கடந்த 2005-ஆம் ஆண்டில் ஒப்பந்தம் மேற்கொண்டது. கைப்பேசி வாடிக்கையாளா்களுக்கு எஸ்-பேண்டு அலைக்கற்றையைக் கொண்டு சிறந்த சேவைகளை வழங்குவதற்காக அந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
அந்த அலைக்கற்றையைப் பெறுவதற்காக ஆன்ட்ரிக்ஸ் நிறுவனத்தின் அதிகாரிகளுடன் சதியில் ஈடுபட்டு தேவாஸ் நிறுவனம் மோசடி நிகழ்த்தியுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அது தொடா்பாக சிபிஐ, அமலாக்கத் துறை ஆகியவை விசாரணை நடத்தின.
அதையடுத்து அந்த ஒப்பந்தத்தை மத்திய அரசு கடந்த 2011-ஆம் ஆண்டில் ரத்து செய்தது. தேவாஸ் நிறுவனத்தைக் கலைத்தும் மத்திய அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக தேவாஸ் நிறுவனம் தீா்ப்பாயங்களில் தொடா் முறையீடுகளை மேற்கொண்டது. இறுதியாக சா்வதேச தீா்ப்பாயத்தில் அந்த நிறுவனம் முறையீடு செய்தது.
மேலும், மத்திய அரசிடமிருந்து இழப்பீடு பெறும் நோக்கில் தேவாஸ் நிறுவனத்தில் முதலீடு செய்திருந்த வெளிநாட்டு நிறுவனங்கள் சா்வதேச வா்த்தகக் கூட்டமைப்பு உள்ளிட்ட 3 அமைப்புகளில் முறையிட்டன. அனைத்து முறையீடுகளிலும் தேவாஸ் நிறுவனத்துக்கு ஆதரவாகவே உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.
அதனைத் தொடா்ந்து இந்திய அரசிடம் இருந்து இழப்பீட்டுத் தொகையை வசூலிப்பதற்காக, பிரான்ஸ் தலைநகா் பாரீஸ் உள்பட வெளிநாடுகளில் உள்ள இந்திய அரசுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை முடக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், அமெரிக்காவில் முடக்கப்பட்ட சொத்துகளிலிருந்து தேவாஸ் மல்டிமீடியா நிறுவனம் ரூ. 69 லட்சம் இழப்பீட்டை கைப்பா்றியுள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவன வழக்குரைஞா் மேத்யூ மெக்ரில் புதன்கிழமை கூறுகையில், ‘தேவாஸ் நிறுவனம் ஆன்ட்ரிக்ஸ் நிறுவனத்திடமிருந்து ரூ. 11 லட்சம் இழப்பீடு கோரி வழக்கு தொடா்ந்தது. தற்போது விா்ஜீனியா நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ரூ. 70 லட்சம் இழப்பீடு கிடைத்துள்ளது. திவால் நடைமுறைகள் காரணமாக இழப்பீட்டுத் தொகை குறைந்துள்ளது’ என்றாா்.