சுதந்திர இந்தியாவில் ஊழல் அதிகம் நடைபெறும் மாநிலமாக மேற்கு வங்கம் மாறியுள்ளதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
மாநிலத்தில் ஊழல் பெருகியுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவதுடன் விரைவில் ஊழல்வாதிகள் சிறையில் தள்ளப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல ஆளும் திரிணமுல் அரசுக்கு எதிராக மாநிலத்தின் பல பகுதிகளிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. மேற்கு வங்க மாநிலத்தின் பாஜக தலைவர் சுகந்த மஜூம்தார் பிர்பம் மாவட்டத்தில் போராட்டத்தினை தலைமையேற்று நடத்தினார்.
இந்தப் போராட்டம் குறித்து மாநில பாஜக தலைவர் சுகந்த மஜூம்தார் கூறியதாவது: “ ஆளும் திரிணமுல் அரசு மேற்கு வங்கத்தை கொள்ளையடித்து வருகிறது. இந்தியா சுதந்திரம் அடைந்தது முதல் உள்ள அரசுகளில் மேற்கு வங்க அரசு அதிக ஊழலில் திளைத்துள்ளது. ஊழலில் ஈடுபடுபவர்கள் சிறைக்கு செல்வதற்கான காலம் வெகு தொலைவில் இல்லை. அவர்கள் விரைவில் சிறையில் அடைக்கப்படுவார்கள். அரசின் தலைவராக முதலமைச்சர் இருப்பதால் அவர் உடனடியாக பதவி விலக வேண்டும்.” என்றார்.