கரோனா தொற்றுநோய் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நிறுத்தப்பட்ட ஓணம் பண்டிகை இந்தாண்டு சிறப்பாகக் கொண்டாடக் கேரள அரசு முடிவு செய்துள்ளது.
மாநிலம் முழுவதும் செப்டம்பர் 6 முதல் 12 வரை பெரியளவில் ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் நடத்தக் கேரள அரசு முடிவு செய்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பி.ஏ மொகமது ரியாஸ் தெரிவித்துள்ளார். இதற்கான நிகழ்ச்சிகளை மாநில சுற்றுலாத்துறை ஏற்பாடு செய்யும் என்றார்.
செம்டம்பர் 6-ஆம் தேதி கனகக்குன்னு அரண்மனை மைதானத்தில் உள்ள நிஷா காந்தி திறந்தவெளி அரங்கில் நடைபெறும் பிரமாண்ட விழாவில் முதல்வர் பினராயி விஜயன் விழாவைத் தொடங்கி வைக்கிறார்.
கரோனா தொற்றுநோயால் ஏற்பட்ட இருளிலிருந்து மீண்டு, வாழ்க்கை இயல்பு நிலைக்குத் திரும்புவதால், இந்தாண்டு ஓணம் கொண்டாட்டங்கள் மிகப்பெரிய அளவில் திட்டமிடப்பட்டுள்ளன. தொற்றுநோயால் ஏற்பட்ட நெருக்கடியையும், துயரத்தையும் மறந்து மீண்டும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டிய நேரமிது.
மாநிலத்தில் ஓணம் பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்படும். மாநில தலைநகர் மட்டுமின்றி மாநிலம் முழுவதும் அனைத்துத் துறைகளிலும் கொண்டாடுங்கள் நடத்தப்படும் என்றார்.
விழாவில் கலாசார நிகழ்ச்சிகளில் பாரம்பரிய கலை வடிவங்கள் முக்கியத்துவம் பெறும் என்று பொதுக்கல்வி மற்றும் தொழிலாளர் துறை அமைச்சர் வி.சிவன் குட்டி தெரிவித்தார்.