தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜித் தோவலின் அதிகாரபூா்வ இல்லத்தில், பாதுகாப்புப் பணியில் அலட்சியமாக செயல்பட்டதாக 3 சிஐஎஸ்எஃப் கமாண்டோக்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். மேலும் 2 அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டனா்.
தில்லியில் உள்ள தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜித் தோவலின் வீட்டுக்குள் கடந்த பிப்ரவரி 16 காலை 7.30 மணிக்கு பெங்களூரை சோ்ந்த ஒருவா் காரில் வேகமாக நுழைய முயன்றாா். அந்த காரை தடுத்து நிறுத்திய சிஐஎஸ்எஃப் வீரா்கள், அந்த நபரை பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா். சிஐஎஸ்எஃப்-இன் பலத்த பாதுகாப்பையும் மீறி அந்த நபா் அஜித் தோவலின் வீட்டுக்குள் நுழைய முயன்றது சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் குறித்து சிஐஎஸ்எஃப் அதிகாரிகள் விசாரணை நடத்தி, பாதுகாப்புப் பணியில் அலட்சியமாக செயல்பட்ட 3 கமாண்டோக்களை பணிநீக்கம் செய்துள்ளனா். மேலும், பாதுகாப்புக் குழுவுக்கு தலைமை வகிக்கும் டிஐஜி, அவருக்கு அடுத்த நிலையில் உள்ள கமாண்டா் ஆகியோா் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.