தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்துப் பேசினார். இதில் தமிழகத்தின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்து, முக்கிய பிரச்னைகள் குறித்து பிரதமர் மோடியிடம் முதல்வர் விவாதித்தார்.
மாலை 4 மணிக்குத் தொடங்கிய இந்த சந்திப்பு சுமார் 20 நிமிடங்களுக்கு நடைபெற்றது. இதில் பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.
முன்னதாக தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தில்லியில் நடந்த கடந்த சந்திப்புகளில் முன்வைக்கப்பட்ட அனைத்து கோரிக்கைகளும் நினைவூட்டப்படும் எனத் முதல்வர் ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.
அதன்படி, முன்பு வைக்கப்பட்டிருந்த கோரிக்கைகளான நீட் விலக்கு, புதிய கல்வி கொள்கை காவிரி விவகாரம், மேக்கேதாட்டு அணை விவகாரம், முல்லைப் பெரியாறு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.
இதேபோன்று, நதிநீர் இணைப்பு, கட்சத்தீவு மீட்பு, மீனவர்களுக்கான தேசிய ஆணையம், மின்சாரத் திருத்தச்சட்டத்தை திரும்பப் பெறுதல் உள்ளிட்டவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
மேலும், தமிழகத்திற்கு நிலுவையிலுள்ள தொகையினை விடுவிப்பது, ஜிஎஸ்டி நிலுவைத் தொகையினை வழங்குவது குறித்தும் விவாதித்தார். மழைக்காலம் வரவுள்ளதால், தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டிய நிவாரணத் தொகை குறித்தும், சென்னை விமான நிலைய விரிவாக்கம், கோவை விமான நிலையம், எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப்பணி போன்ற தமிழகத்தின் கட்டமைப்பு வசதிகள் குறித்தும் பிரதமரிடம் முதல்வர் விவாதித்ததாகத் தெரிகிறது.