புது தில்லி: குஜராத் கலவரத்தின் போது பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்ட விவகாரம் குறித்து கண்டனம் தெரிவித்திருக்கிறார் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி.
பில்கிஸ் பானு விவகாரத்தில், பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சுக்கும் செயலுக்கும் உள்ள வேறுபாட்டை, ஒட்டுமொத்த நாடே பார்த்துக் கொண்டிருக்கிறது என்று ராகுல் விமரிசித்துள்ளார்.
குற்றவாளிகளை விடுதலை செய்திருப்பதன் மூலம், இந்த நாட்டில் உள்ள அனைத்துப் பெண்களுக்கும் பிரதமர் மோடி எந்த விதமான செய்தியை சொல்லவிருக்கிறார் என்றும் ராகுல் கேள்வி எழுப்பியுள்ளார்.
குஜராத்தில் கடந்த 2002ஆம் ஆண்டு மூண்ட கலவரத்தின்போது பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 11 குற்றவாளிகளும் மாநில அரசின் சிறப்பு அதிகாரத்தின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர்.
மாநில அரசின் உத்தரவைத் தொடர்ந்து, 11 குற்றவாளிகளும் கோத்ரா சிறைச்சாலையிலிருந்து திங்கள்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
ஐந்து மாத கர்ப்பிணியை பலாத்காரம் செய்து, அவரது 3 வயது மகளைக் கொன்றவர்கள் நாட்டின் சுதந்திர நாளில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் மகளிர் சக்திக்கு பிரதமர் மோடி எந்தவிதமான செய்தியை சொல்லவிருக்கிறார் என்று ராகுல் கேள்வி எழுப்பியுள்ளார்.