தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அவருக்கு நினைவுப் பரிசு ஒன்றை வழங்கினார்.
உடல் ஆரோக்கியத்தைப் பேண உதவும், தமிழ்நாட்டின் தானியங்கள் அடங்கிய பெட்டகத்தை பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
அதில், மாப்பிள்ளை சம்பா, குள்ளக்கார், கருப்பு கவுணி, கேழ்வரகு, கம்பு, சீரக சம்பா, சாமை, தினை, வரகு முதலியவை அடங்கியிருந்தன.
தமிழகத்தின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்துவதற்காக பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 4 மணியளவில் நேரில் சென்று சந்தித்தார்.
சுமார் 20 நிமிடங்களுக்கு இந்த சந்திப்பு நீடித்தது. இதில் நீட் விலக்கு, புதிய கல்வி கொள்கை காவிரி விவகாரம், மேக்கேதாட்டு அணை விவகாரம், முல்லைப் பெரியாறு, நதிநீர் இணைப்பு, கட்சத்தீவு மீட்பு, மீனவர்களுக்கான தேசிய ஆணையம், மின்சாரத் திருத்தச்சட்டத்தை திரும்பப் பெறுதல் போன்ற தேவைகள் குறித்து கோரிக்கை வைக்கப்பட்டது.
மேலும், தமிழகத்திற்கு நிலுவையிலுள்ள தொகையினை விடுவிப்பது, ஜிஎஸ்டி, மழைக்காலம் வரவுள்ளதால், பேரிடர் நிவாரணம் போன்றவற்றை விடுவிப்பது குறித்தும், தமிழகத்தின் உள்கட்டமைப்புகளான சென்னை விமான நிலைய விரிவாக்கம், ஏய்ம்ஸ் மருத்துவமனை போன்றவை குறித்தும் விவாதித்ததாகத் தெரிகிறது.