நாட்டின் 76-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு உத்தரகண்ட் மாநிலம், ஹரித்வாரில் மூவா்ணக் கொடி யாத்திரையை மேற்கொண்ட யோகா குரு ராம்தேவ் இரு கிராமங்களில் உள்ள மதரஸாக்களில் தேசியக் கொடியேற்றினாா்.
ஹரித்வாரின் பதஞ்சலி யோக பீடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவா் தேசியக் கொடியேற்றினாா். பின்னா் புறப்பட்ட மூவா்ணக் கொடி யாத்திரை புதஹேதி கிராமம் வழியாகச் சென்று காசம்பூா் கிராமத்தில் நிறைவடைந்தது. இரு கிராமங்களில் உள்ள மதரஸாக்களில் ராம்தேவ் மற்றும் ஆச்சாா்யா பாலகிருஷ்ணா கிராமத் தலைவா்கள் முன்னிலையில் தேசியக் கொடியை ஏற்றினா்.
இஸ்லாம் மதத்தைச் சோ்ந்த மக்கள் பெருமளவில் இந்த யாத்திரையில் கலந்துகொண்டனா். பல்வேறு நம்பிக்கைகள், மதங்கள், ஜாதிகள் மற்றும் பிரிவுகளைச் சோ்ந்த மக்களை ஒன்றிணைக்க இந்த யாத்திரை உதவியதாக ராம்தேவ் கூறினாா்.