மகாராஷ்டிரத்தில் தொகுதி ஊழியர்களுக்கு தரமற்ற உணவு வழங்கிய, ஒப்பந்த மேலாளரை சிவசேனை எம்.எல்.ஏ. கன்னத்தில் அறைந்த விடியோ பலரால் பகிரப்பட்டு வருகிறது.
ஹிங்கோலி தொகுதியில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தரமற்ற மதிய உணவு வழங்கப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து அவர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
மகாராஷ்டிர மாநிலம் ஹிங்கோலி தொகுதியில் சிவசேனை கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் சந்தோஷ் பாங்கர். இவரது தொகுதியில் உள்ள தொழிலாளர்களுக்கு தரமற்ற மதிய உணவு வழங்கப்படுவதாக புகார் எழுந்தது.
இதனைத் தொடர்ந்து தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த சமையல் ஒப்பந்த மேலாளரை நேரில் சென்று சந்தித்த சந்தோஷ் பாங்கர், உணவின் தரம் குறைந்தது ஏன் எனக் கேள்வி எழுப்பி விளக்கம் கேட்டுள்ளார். அப்போது அவர் மேலாளரின் கன்னத்தில் அறைந்து அவரை எச்சரிக்கிறார். இந்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. சந்தோஷ் பாங்கர், உள்நோக்கத்துடன் மேலாளரை அறைந்ததாகவும் கூறப்படுகிறது.
சிவசேனை கட்சித் தலைவரான உத்தவ் தாக்கரே மீது அதிருப்தி கொண்டு தனியாகப் பிரிந்த ஏக்நாத் ஷிண்டேவின் ஆதரவாளர் சந்தோஷ் பாங்கர் என்பது குறிப்பிடத்தக்கது. மகாராஷ்டிர சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அவர், ஏக்நாத் ஷிண்டே அணிக்கு மாறினார்.