இந்தியா முழுவதும் பள்ளிக் கல்வி மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதில் தில்லி அரசின் மாதிரியைப் பயன்படுத்தி உலகின் முதல் நாடாக மாற்ற வேண்டும் என்று முதல்வர் அரவிந்த் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.
இலவச கல்வி மற்றும் சுகாதார வசதிகளை "இலவசம்" என்று கூற வேண்டாம் என்றும் பாஜ தலைமையிலான மத்திய அரசுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.
கேஜரிவால் மக்களை அதிகாரத்திற்காக சிக்கவைக்கும் ஒரு தூண்டிலாக இலவசங்களைப் பயன்படுத்தி வருவதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளதால் அரசியல் கசப்புணர்வு ஏற்பட்டுள்ளது.
கடந்த மாதம் உத்தரப் பிரதேசத்தில் புந்தேல்கண்ட் விரைவுச் சாலையை பிரதமா் நரேந்திர மோடி திறந்து வைத்த பிறகு, வாக்குகளைப் பெறுவதற்காக இலவசங்களை வழங்கும் ‘ரெவ்டி கலாசாரம்’ உருவாகி வருவதாகவும் இது நாட்டின் வளா்ச்சிக்கு மிகவும் ஆபத்தானது என்றும் கூறியிருந்தாா்.
வாக்காளா்களை கவருவதற்காக சில கட்சிகள் வாக்குறுதி அளித்து வரும் இலவசங்கள் விஷயத்தில் பொதுமக்கள், குறிப்பாக இளைஞா்கள் இதற்கு எதிராக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அவா் கூறியிருந்தார்.
சுகாதார சேவைகள் மற்றும் கல்வியை மேம்படுத்துவதற்கு மத்திய அரசுடன் இணைந்து பணியாற்ற நாங்கள் தயாராக இருக்கிறோம்.
அவற்றை இலவசங்கள் என்று அழைப்பதை நிறுத்துமாறும் மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறேன் என்று செய்தியாளர் கூட்டத்தில் கேஜரிவால் கூறினார்.
குழந்தைகளின் எதிர்காலத்திற்காக அரசுப் பள்ளிகளைப் பெரியளவில் திறந்து, மேம்படுத்தி, ஆசிரியர்களை முறைப்படுத்த, ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்க வேண்டும்.
அப்போது தான் இந்தியா "பணக்கார நாடாக" மாற முடியும் என்று ஆம் ஆத்மி முதல்வர் தெரிவித்துள்ளார்.
இதையெல்லாம் ஐந்து வருடத்தில் செய்துவிடலாம். இதை நாங்கள் செய்துள்ளோம்.
அரசுப் பள்ளிகள் மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்த தில்லியின் நிபுணத்துவத்தைப் பயன்படுத்துமாறு மத்திய அரசை நான் கேட்டுக்கொள்கிறேன். அனைத்து மாநில அரசுகளும் இணைந்து செயல்பட முடியும் என்றும் கேஜரிவால் கூறினார்.