உத்தரப்பிரதேச மாநிலம் ஃபிரோஸாபாத் பகுதியில் உள்ள காவலர் விடுதியில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாகக் கூறி தலைமைக் காவலர் ஒருவர் கதறி அழுதபடி புகார் கூறிய நிலையில், அவரை தூக்கிச் சென்ற காவலர்கள் பூட்டிய அறைக்குள் அடைத்துவைத்துள்ளனர்.
கண்களில் கண்ணீருடன், கையில் உணவுத் தட்டுடன், உத்தரப் பிரதேச மாநில தலைமைக் காவலர் மனோஜ் குமார் பொதுமக்கள் முன்னிலையில் தனது துயரத்தை வெளிப்படுத்தினார். இந்த விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
பல முறை தரமற்ற உணவு குறித்து உயரதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தப் பயனும் இல்லை என்றும், வெந்ததும் வேகாததுமான தோசைக்கல் போன்ற சப்பாத்தியும், அதனை தொட்டுக் கொள்ள ஆறாக ஓடும் தண்ணீர் போல பருப்பும் கொடுப்பதாக அவர் கண்ணீர்விட்டுக் கதறினார்.
அவர் கையில் வைத்திருந்த தட்டில் சில ரொட்டிகளும், கொஞ்சம் அரிசி சாதமும், பருப்பும் இருந்தது. அதனை கையில் வைத்தபடி, சாலையில் போராட்டம் நடத்திய காவலர், "ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை வாங்குகிறார்கள். ஆனால், வேலை முடிந்த பிறகு இந்த ரொட்டிகளைத்தான் காவலர்கள் சாப்பிட வேண்டும். அவ்வளவு ஏன் ஒரு நாய் கூட இந்த ரொட்டிகளை சாப்பிடாது. எங்களால் இந்த உணவை சாப்பிட முடியவில்லை. எங்களது வயிற்றுக்குள் எதுவும் இல்லை என்றால் எப்படித்தான் நாங்கள் வேலை செய்வது? என்று கேட்ட கதறி அழுதார்.
தொடர்ந்து உணவு குறித்து புகார் சொல்லிக் கொண்டிருந்த மனோஜ் குமாரை, அங்கிருந்த சக காவலர்கள் தூக்கிக் கொண்டு உள்ளே சென்றனர். அதன்பிறகு தனக்கு என்ன நடந்தது என்பது குறித்து அவர் சொல்லியிருப்பது என்னவென்றால், என்னை பூட்டிய அறைக்குள் அடைத்தனர். எனது செல்லிடப்பேசியை பறித்துக் கொண்டு அதிலிருந்த தகவல்களை அழித்துவிட்டனர். ஆக்ராவில் உள்ள மனநல மருத்துவமனைக்கும் கொண்டு செல்ல முயற்சித்தனர். ஊடகங்களில் பேசக் கூடாது என்று மிரட்டி என்னை ஏழு நாள்கள் விடுப்பில் அனுப்பி வைத்தனர். நான் விடுப்பு கேட்காத நிலையில் எனக்கு விடுப்பு கொடுத்து அனுப்பியிருக்கிறார்கள். எனது வேலையும் தற்போது ஆபத்தில் உள்ளது என்றார்.