கர்நாடக காங்கிரஸ் கட்சியில் குழப்பம் ஏற்படுத்த சிலர் முயற்சிப்பதாக மாநிலத் தலைவர் சிவக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
சுதந்திர நாளையொட்டி கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டது. இதனையொட்டி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சுதந்திரப் போராட்ட வீரர்களை நினைவுகூரும் வகையில், பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், பெங்களூருவிலுள்ள ஹுட்சன் சர்க்கிள் பகுதியில் வைக்கப்பட்டிருந்த திப்பு சுல்தான் படம் இருந்த காங்கிரஸ் கட்சி வைத்த பதாகையை மர்ம நபர்கள் கிழித்தெறிந்தனர்.
இந்த சம்பவம் காங்கிரஸ் கட்சியினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து மாநில காங்கிரஸ் தலைவர் சிவக்குமார், நிகழ்விடத்தை நேரில் சென்று பார்வையிட்டார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சிவக்குமார், காங்கிரஸ் கட்சியின் சுதந்திர நாள் பேரணியை சிலரால் பொருத்துக்கொள்ள முடியவில்லை. மாநிலத்தில் பிரச்னைகளை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர்கள் உள்ளனர் என பாஜகவை மறைமுகமாக குறிப்பிட்டார்.