நடிகர் ஷாருக் கான் தனது வீட்டில் தேசியக் கொடியேற்றி குடும்பத்தாருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி சுதந்திரப் போராட்ட வீரர்களை நினைவுகூரும் வகையில் சனிக்கிழமை(ஆகஸ்ட் 13) முதல் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 15) வரை வீடுகளில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டுமென மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து ஏராளமானோர் தங்களது வீடுகளில் தேசியக் கொடியேற்றி வருகின்றனர். அதோன்று நடிகர்களும் தங்களது இல்லங்களில் தேசியக் கொடியேற்றி வருகின்றனர். அந்த புகைப்படங்களை தங்களது சமூக வலைதளப் பக்கங்களிலும் பகிர்ந்து வருகின்றனர்.
அந்தவகையில், நடிகர் ஷாருக் கான் மும்பையிலுள்ள தனது இல்லத்தில் குடும்பத்தாருடன் தேசியக் கொடியேற்றினார். பின்னர் தேசியக் கொடி முன்பு ஷாருக் கான், அவரின் மனைவி கெளரி கான், மகன்கள் ஆர்யன் கான், அப்ராம் ஆகியோர் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அனைவரும் வெள்ளை நிற உடை அணிந்து தேசியக் கொடியேற்றிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் ஆர்யன் கானை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். ஆனால், போதிய ஆதாரங்கள் இல்லாததால், அவர் நிரபராதி எனக் கருதி விடுவிக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.